வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை.. பறிபோன 20 சவரன் நகை, பணம்.. நள்ளிரவில் துணிகரம்..
கொள்ளைச் சம்பவம் நடந்த உடனே, கலைச்செல்வி தனது மகள் வீட்டிற்குத் தகவல் தெரிவித்து, ராசிபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல், ஜுன் 12: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தனியாக இருந்த மூதாட்டியைத் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் அம்மன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (58). கணவரை இழந்த இவர், தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய கலைச்செல்வி, இரவு 8 மணியளவில் வீட்டில் தனியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது மருமகள் சாப்பாடு எடுத்து வருவதற்காகச் சென்றிருந்த வேளையில், திடீரென இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் தோட்டத்திற்குள் புகுந்து வீட்டிற்குள் நுழைந்தது.
இதையும் படிக்க: ‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!
கத்தி, துப்பாக்கியுடன் மிரட்டல்:
பாதிக்கப்பட்ட மூதாட்டி கலைச்செல்வி தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறும்போது, நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு பேர் உள்ளே வந்தனர். ஒருவன் எனது வாயைப் பொத்தி, கழுத்தில் கத்தியை வைத்தான். மற்றொருவன் நீளமான நாட்டுத் துப்பாக்கி போன்ற ஒரு துப்பாக்கியை என் மீது நீட்டி மிரட்டினான். அவர்கள் இருவரும் தங்களின் முகத்தை பிளவுஸ் துணியால் மூடிக்கட்டியிருந்தனர்; கண்கள் மட்டும்தான் தெரிந்தன. 25 வயதிற்குள் இருக்கும் அவர்கள் இருவரும் தமிழில்தான் பேசினார்கள்” என்று அதிர்ச்சியோடு தெரிவித்தார்.
20 சவரன் நகை, ரூ.20,000 ரொக்கம் கொள்ளை:
தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், கலைச்செல்வியை வலுக்கட்டாயமாகத் தள்ளிச் சென்று, வீட்டில் இருந்த பீரோக்களைத் திறக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். பயந்துபோன அவர் பீரோவைத் திறந்துள்ளார். அதில் இருந்த 15 சவரன் நகைகள், கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் செயின் என மொத்தம் 20 சவரன் தங்க நகைகளையும், அங்கிருந்த ரூ.20,000 பணத்தையும் கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதையும் படிக்க: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!
தனிப்படை அமைத்து தீவிர விசாரணை:
கொள்ளைச் சம்பவம் நடந்த உடனே, கலைச்செல்வி தனது மகள் வீட்டிற்குத் தகவல் தெரிவித்து, ராசிபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய நபர்கள் குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.