அய்யா ராமதாஸ் பூரண குணமடைந்து, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டுகிறேன் – திமுக தலைவர் ஸ்டாலின்..
பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள அருளை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி பள்ளப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடன் இருந்த கட்சியினர் அவரை உடனடியாக தாங்கிப் பிடித்து சேலத்தில் குரங்கணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 13, 2026: பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மாவட்டம் தோறும் சென்று மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், தந்தை மற்றும் மகன் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் போட்டியின் காரணமாக கட்சி இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்ட மாம்பழச் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அந்த கூட்டணியில் அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிட்டத்தட்ட 18 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த ராமதாஸ்:
இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். இதற்காக சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள அருளை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி பள்ளப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
உடன் இருந்த கட்சியினர் அவரை உடனடியாக தாங்கிப் பிடித்து சேலத்தில் குரங்கணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.’
மேலும் படிக்க: அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை – பரபரப்பு தகவல்
மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ அனுமதி:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த காரணத்தினால் இந்த திடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு அல்லது இரண்டு நாட்கள் கண்காணிப்பில் வைத்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலின்:
மருத்துவர் இராமதாசு ஐயா விரைந்து நலம்பெற விழைகிறேன்.
சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் ஐயா திரு. @DrRamadoss அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் நல்ல…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 13, 2026
இந்த நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்தல் பரப்புரையின் போது உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி மீண்டும் பொதுவாழ்க்கையில் தனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.