காலில் விழுவது போல தவறாக நடக்க முயற்சி.. நகராட்சி ஊழியர் மீது பெண் கவுன்சிலர் புகார்!
Tindivanam Municipality Issue: விழுப்புரம் திண்டிவனத்தில், இளநிலை உதவியாளர் ஒருவர் பெண் கவுன்சிலரின் காலில் விழுந்த வீடியோ வைரலானது. உதவியாளர், கவுன்சிலரின் மிரட்டலால் கட்டாயப்படுத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாகவும், கவுன்சிலர் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், செப்டம்பர் 4: விழுப்புரம் மாவட்டத்தில் பெண் கவுன்சிலர் காலில் இளநிலை உதவியாளர் ஒருவர் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் காலில் விழுவது போல் தன்னிடம் அந்த ஊழியர் தவறாக நடந்து கொண்டார் என பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள ரோஷன் காலனியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் முனியப்பன் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் அறையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக பெண் கவுன்சிலர் ரம்யா ஆகியோர் இருந்தனர். அப்போது திடீரென முனியப்பன் பெண் கவுன்சிலர் ரம்யாவின் அருகே சென்று அவரின் காலில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அவர் முன்பு கையெடுத்து கும்பிட்டு பேசுவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அதிமுக போராட்டம் – போலீசார் வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த அர்ஜுனன் தலைமையிலான தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முனியப்பனை காலில் விளக்கு செய்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
Also Read: திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!
இதனையடுத்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முனியப்பன் புகார் ஒன்றை அளித்தார். அதன்படி சம்பவத்தன்று நான் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். அப்போதே 20வது வார்டு பெண் கவுன்சிலர் ரம்யா அங்கு வந்து 2021 ஆம் ஆண்டுக்கான தெரு விளக்குகள் பழுதுபார்ப்பு தொடர்பான கோப்புகளை தருமாறு கேட்டார். நான் அந்த கோப்புகளை தேடிக்கொண்டிருந்த போது, கால தாமதமானதை சுட்டிக்காட்டி இன்னும் அதனை எடுக்கவில்லையா என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டினார்.
கட்டாயத்தின் பேரில் மன்னிப்பு
This is DMK’s model of Social Justice.
A public servant belonging to the Scheduled Caste community in Tindivanam was cornered continuously by DMK Councillors and was made to apologise by falling at the feet of the DMK Councillor Ramya. This is not the first time DMK has… pic.twitter.com/XrjNvtPvAN
— K.Annamalai (@annamalai_k) September 3, 2025
பின்னர் ஆகஸ்ட் 29ஆம் தேதி 10 காலை 11 மணி அளவில் ரம்யாவுடன் நான்கு பேர் வந்து என்னை மிரட்டினார்கள். அவரது கணவர் ராஜா உன்னை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டினார். அப்போது எனது சாதி பெயரை சொல்லி இழிவாக பேசினார்கள். தொடர்ந்து மாலை 4 மணியளவில் பணியில் இருந்த போது நகராட்சி ஆணையர் அறைக்கு நகர மன்ற தலைவரான நிர்மலாவின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் அழைக்கிறார் என சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நான் அங்கு சென்றேன். அங்கு ரவிச்சந்திரன், ரம்யா, நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அப்போது கவுன்சிலர் ரவிச்சந்திரன், ரம்யாவிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய்?, அவரிடம் மன்னிப்பு கேள் என கூறினார். இதனால் கட்டாயத்தின் பேரில் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Also Read: மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரம்யா, அவரது கணவர் ராஜா, கவுன்சிலர் ரவிச்சந்திரன், நகராட்சி அதிகாரிகளான நெடுமாறன், பழனி, செந்தில்குமார், திலகவதி, காமராஜ், ஆனந்தன், பிர்லா செல்வம் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தவறாக நடந்து கொண்டதாக புகார்
இப்படியான நிலையில் பெண் கவுன்சிலர் ரம்யா போலீசில் முனியப்பன் மீது புகார் அளித்துள்ளார். அதில் நான் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு பணி சம்பந்தமாக சென்றிருந்தேன். அப்போது அங்கு பணிபுரியும் முனியப்பன் கோப்புகளை தேடிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் அலுவலகப் பணியாளரான மகா என்பவரை உதவிக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறினேன். அதற்கு முனியப்பன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசினார்.
மரியாதையாக பேசுங்கள் என நான் பதிலளித்தேன். பின்னர் நகராட்சி ஆணையரிடம் வாய்மொழி புகாராக நடந்ததை தெரிவித்தேன். அவர் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என கூறினார். நான் எழுத்துப்பூர்வமாக நடந்ததை எழுதி ஆணையரை பார்க்க காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் முனியப்பன் மீது புகார் அளித்தால் அவரது பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும். எனவே புகார் அளிக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
அப்போது பேசிக் கொண்டிருக்கும்போது முனியப்பன் மன்னிப்பு கேட்பதாக எனது காலில் விழுவது போல் விழுந்து அவரது இடது கையால் என்னிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார். நான் சுதாரித்துக் கொண்ட நாற்காலியை நகர்த்தி போட்டு உட்கார்ந்தேன். எனவே தவறாக நடந்த முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரம்யா தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.