திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!
சேலம் மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தியை திமுக கவுன்சிலர் சுகாசினி கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சமாக இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. சுகாசினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம், மே 29: சேலம் மாநகராட்சி (Salem Corporation) மாமன்ற இயல்பு கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் மாநகராட்சியில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று அவசர மற்றும் இயல்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில் கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் என அனைவரும் பங்கேற்றிருந்தனர். இப்படியான நிலையில் கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டில் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள் மேலும் மண் சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும். அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரான யாதவமூர்த்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மாநகராட்சி டென்டர்களை குறைந்த விலைக்கு கேட்கும் காண்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதில்லை. அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக கூடுதல் தொகைக்கு டெண்டர் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அமைச்சரை அவமரியாதையாக யாதவமூர்த்தி பேசியதாக ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சண்டை




அப்போது 45 ஆவது வார்டு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த சுகாசினி என்ற பெண் கவுன்சிலர் யாதவமூர்த்தி முன்னாள் கையை நீட்டி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அவரது கையை யாதவமூர்த்தி தட்டி விட்ட நிலையில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுகாசினி பளார் என அவர் கன்னத்தில் ஒரு அறை வைத்தார். இதனைப் பார்த்ததும் அருகில் இருந்த மற்றொரு பெண் கவுன்சிலரும் யாதவமூர்த்தியை தாக்க முற்பட்டார். உடனடியாக இரு தரப்பினரையும் சுற்றி திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் திரண்டு கடுமையான வாக்குவாதம் செய்தனர்.
தேசிய கீதம் பாடியும் சண்டை நிற்கவில்லை
மேலும் மேயர் ராமச்சந்திரனிடம் முறையிட சென்ற யாதவமூர்த்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும், ஆணையாளர் இளங்கோவனும் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூட்டரங்கை விட்டு வெளியேற முற்பட்டனர். ஆனால் வாசல் கதவு வரை சென்ற நிலையில் உள்ளே கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வகையிலும், சண்டையை நிறுத்தும் நோக்கிலும் தேசிய கீதம் பாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போதாவது சண்டையை நிறுத்திவிட்டு நாட்டுப்பண்ணுக்கு மரியாதை செலுத்துவார்கள் என நினைத்தால் நீங்கள் ஒரு பக்கம் பாடுங்கள், நாங்கள் வாக்குவாதம் செய்து கொள்கிறோம் என்பது போல அவர்களின் சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கவுன்சிலர் சுஹாசினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாட்டோம் என மேயர் இருக்கை முன்பு அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சுகாசினி சேலம் அரசு மருத்துவமனையில் கவுன்சிலர் யாதவமூர்த்தி தன்னை தாக்கிவிட்டதாக கூறி சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.