நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. 25- ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. ஒரே இடத்தில் உடல்களை தகனம் செய்ய முடிவு?
Virudhunagar Cracker Factory Explosion : விருதுநகர் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25- ஐ தொட்டுள்ளது. இதில், 20 பேரின் சடலங்களுக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட உள்ளன.

பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை வனஜா என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடங்கள் அனைத்தும் இடிந்த நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. தொடர்ந்து, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் ஈடுபட்டனர்.
பலி எண்ணிக்கை 25- ஐ தொட்டது
இதில், முதல் கட்டமாக 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 6 பேர் பலத்த காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. இதனால், தொடர்ந்து அதிகரித்து வந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 25- ஐ எட்டியுள்ளது. விருதுநகர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் 20 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உடற் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரின் சடலங்கள் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஒரே இடத்தில் 24 பேரின் சடலங்கள் தகனம் செய்யப்பட உள்ளன.
மேலும் படிக்க: 13 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. வரும் நாட்களில் இன்னும் உயரும் என வானிலை மையம் எச்சரிக்கை..
16 பெண்கள் – ஒரு குழந்தை உள்பட 24 பேர் பலி
உயிரிழந்தவர்களில் 16 பெண்கள், ஒரு குழந்தை மீதமுள்ளவர்கள் ஆண்கள் ஆவர். இதனிடையே, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 5 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 3 போலீசார் பலத்த காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பட்டாசு ஆலை விதிகளை மீறி செயல்பட்டதும், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலை செயல்பட்டதும் தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிப்பு
மேலும், காகித குழாய்கள், அட்டைகள் இருந்த குடோனில் 20- க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பாதுகாப்பற்ற சூழலில் பணி செய்ய வைத்ததால் உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசாயன மூல பொருட்களை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரித்ததும் தெரிய வந்தது. இந்த ஆலையின் உரிமையாளரான முத்து மாணிக்கத்தை கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விஜய் பிரச்சாரம்.. முழு விவரம் உள்ளே..