‘ஆட்சியில் பங்கு’ தர மறுத்த முதல்வர்.. ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி ஆலோசனை.. காங்கிரஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?
Praveen Chakravarthy discussion with Rahul: டெல்லியில் நேற்று சோனியா காந்தியின் வீட்டில், ராகுலுடன் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில், கூட்டணி ஆட்சி பற்றி காங்கிரஸில் குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் பிரவீன் சக்கரவர்த்தி. இவர் ராகுலுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பவர் ஆவார்.

கோப்புப் புகைப்படம்
டெல்லியில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் தலைவர் ராகுல் காந்தியை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது. இந்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஜவர் குழு அமைத்திருந்த நிலையில், திமுக குழு அமைக்க தாமதப்படுத்தியது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி வெளிப்படுத்தினர். காங்கிரஸ் தலைமையிலான குழு, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல்வரைச் சந்தித்து பேசியது. இந்த சந்திப்பு நடந்து 70 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:
இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் ஐவர் குழு தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதோடு, எந்தத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம், எத்தனை இடங்கள் என்பது குறித்துத் தெளிவு கிடைத்தால் மட்டுமே தங்களால் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராக முடியும் என்ற நம்பிக்கையுடன், திமுக உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்று காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து வரும் 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக திமுக அறிவித்தது.
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்:
இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால், மாநில தலைவர் செல்லப்பெருந்தகை இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். குறிப்பாக, திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் தரப்பில் அழுத்தம் தரப்பட்டது. அதோடு, அதிக தொகுதிகளும் வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே திமுக பேச்சுவார்த்தையை தொடங்க தாமதப்படுத்தியாகவும் கூறப்படுகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவித்தார். இதன் காரணமாகவே, காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்தனர்.
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது:
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதலவர் ஸ்டாலின், திமுக – காங்கிரஸ் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை:
இந்த சூழ்நிலையில், டெல்லியில் நேற்று ராகுல் காந்தியை பரவீன் சக்கரவர்த்தி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கூட்டணி ஆட்சி பற்றி காங்கிரஸில் குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் பிரவீன் சக்கரவர்த்தி. இவர் ராகுலுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பவர். கரூர் சம்பவத்ததையொட்டி, விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் இடையே தொலைபேசி உடையாடலுக்கு ஏற்பாடு செய்தது இவர் தான் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!
தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை:
இந்தநிலையில், சோனியா காந்தியின் வீட்டில், ராகுலுடன் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பல கருத்துகளை ராகுல் காந்தியிடம் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு, கூட்டணி அமைப்பு, வெற்றி வாய்ப்பு பற்றியும் பேசியுள்ளார். 22ம் தேதிக்கு பிறகு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட இருக்கும் தொகுதிகள் பற்றியும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. பிரவீன் சக்கரவர்த்தி உடனான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.