DMK: கடமைக்கு செய்யாதீங்க.. மா.செ.கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!

CM MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்திற் கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

DMK: கடமைக்கு செய்யாதீங்க.. மா.செ.கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Updated On: 

07 Jun 2025 15:25 PM

தமிழ்நாடு, ஜூன் 7: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் (DMK) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) தலைமையில் நடைபெற்றது. இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டின் உரிமைகள் காப்பாற்றப்படவும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களுக்கு தொடர்ந்து சென்ற சேரவும், மக்களை ஓர் அணியில் தமிழ்நாடு என திமுகவில் இணைத்திட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் இன்றைய மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தேறியது” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட பதிவு

களம் 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக கழகத் தோழர்களின் மக்களைச் சந்திக்க புறப்படும் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெற வேண்டும் என தலைமை தொண்டனாக வாழ்த்துகிறேன்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு

இன்றைய கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் முப்பது சதவீதம் புதிய வாக்காளர்களை திமுகவில் கண்டிப்பாக சேர்த்திட வேண்டும். அதேசமயம் கடமைக்கு என உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். மேலும் மக்கள் மற்றும் வாக்காளர்கள் சொல்லும் குறைகளை கேட்டு அதற்கு பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் இதுவரை எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் இந்த முறை புதிதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் களமிறங்க உள்ளது. இதனால் கடைசி நிமிடம் வரை யார் யாருடன் கூட்டணியில் இருக்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் தொடங்கி நேரடியாக வாக்காளர்களை சந்திப்பது வரை அனைத்து பணிகளையும் அனைத்து கட்சி தொண்டர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது