காலை உணவு திட்டம்… மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு 70% குறைவு – முதல்வருக்கு மருத்துவர் அருண் குமார் நன்றி
Dr Arunkumar Praises Breakfast Scheme: தமிழ்நாடு கல்வியில் அடைந்துள்ள சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து மருத்துவர் அருண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டாக்டர் அருண் குமார் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு கல்வித் துறையில் அடைந்துள்ள சாதனைகளை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தலைமையில் செப்டம்பர் 25, 2025 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி குறித்து விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்துக்கு டாக்டர் அருண் குமார் பாராட்டு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபல மருத்துவர் அருண் குமார், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் மூலம் 850 கலோரிகள் மற்றும் தேவையான புரத சத்துக்கள் கிடைக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது 70 சதவிகிதம் குறைந்துள்ளது. மாணவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலம் மேம்படுவதோடு கல்வியின் தரமும் மேம்படுகிறது. காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : விஜய் பிரச்சாரம்.. நவம்பர் 22 இல்லை.. அக்டோபர் 11-ல் கடலூரில் பிரச்சாரம்..
நிகழ்வில் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன், எங்கிருந்தாலும் சாதிக்க முடியும் என தன்னம்பிக்கையோடு இருங்கள். தமிழ்நாடு அரசு உங்களுக்கு ஆதரவாக உள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி அனைவரும் சிறந்தவர்களாக ஆக வேண்டும். என்னைப் போல கிராமப்புறங்களில் இருந்து பலர் வளர வேண்டும் என்பது என் ஆசை என்று தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு லப்பர் பந்து இயக்குநர் பாராட்டு
நிகழ்வில் பேசிய லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான். பல தமிழக அரசின் திட்டங்களால் நானும் பயனடைந்திருக்கிறேன். அதற்காக நன்றி சொல்லவேண்டும். இலவச பஸ் பாஸ் முதல் அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதன் மூலம் படித்து பொறியியல் பட்டம் பெற்றவன நான். இதனால் ஏழ்மையை உணர்ந்தவன் என்பதால் காலை உணவுத்திட்டத்தின் அருமை எனக்கு தெரியும். காலை உணவுத்திட்டத்தை கொண்டுவந்ததற்கு முதல்வருக்கு மிக்க நன்றி. பெரிய பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசுகளுக்கு மத்தியில் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று பேசினார்.
இதையும் படிக்க : மீண்டும் ரூ.10க்கு பாட்டில் குடிநீர் திட்டம்.. தமிழக அரசு முடிவால் மக்கள் மகிழ்ச்சி!
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2025–26 கல்வியாண்டுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் எனும் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிழச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் மிஷ்கின், பிரேம் குமார், தியாகராஜன் குமாரராஜா, தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.