பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!
BJPs innovative campaign: பாஜக கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சமூக ஊடகப்பிரிவு என்று பெயரில் திருச்சி மாநகரில் முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வித்தியாசமான முறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் எந்த வாசகமும் இன்றி 6 வித்தியாசமான கியூஆர் கோடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

பாஜக ஒட்டிய போஸ்டர்கள்
திருச்சி, பிப்ரவரி 14: திருச்சியில் பாஜக மேற்கொண்ட புதுமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என அனைத்து கட்சிகளும் இதுவரை இல்லாத அளவில் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தற்போது வரை தமிழகத்தில், திமுக, அதிமுக என எந்த கட்சியும் தங்களது கூட்டணி இறுதி செய்யவில்லை. தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என இன்னும் சிலர் தங்களது கூட்டணி முடிவை அறிவிப்பதற்காக பெரும் கட்சிகள் காத்திருக்கின்றன.
இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!
நீடிக்கும் கூட்டணி குழப்பம்:
தொடர்ந்து, கூட்டணி இறுதி செய்யப்படும் பட்சத்தில், தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படுமா? அல்லது அதன் காரணமாக மீண்டும் கூட்டணியில் குழப்பம் நிலவுமா என பல எதிர்ப்புகளுடன் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத நிலையாக தற்போது ஆட்சியில் பங்கு குறித்த கோரிக்கை வலுத்துள்ளது. அனைத்து கட்சிகளும் தாங்களும் அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றன. இதனால், இம்முறை காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியை தொடருமா என்பது பெரும் குழுப்பமாக நீடித்து வருகிறது.
பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பாஜக:
இந்த குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க, தேர்தலுக்கு தயாராகும் பணிகளையும் அரசியல் கட்சிகள் முடுக்கியுள்ளன. அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில், ஏற்கெனவே பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் மேடையில் பங்கேற்றனர். அவ்வாறு அடுத்தடுத்த பிரசார கூட்டங்களை மேற்கொள்ளவும் பாஜக திட்டமிட்டு வருகிறது.
திருச்சி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்:
அந்தவகையில், பாஜக கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சமூக ஊடகப்பிரிவு என்று பெயரில் திருச்சி மாநகரில் முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வித்தியாசமான முறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் எந்த வாசகமும் இன்றி 6 வித்தியாசமான கியூஆர் கோடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அத்துடன், ‘ஸ்கேன் மீ’ என்று மட்டும் கியூஆர் கோடுகளுக்கு கீழ் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இதையும் படிக்க: “என்னால் கிடைத்த ரூ.5000”.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!
கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்த மக்கள்:
அந்த கியூஆர் கோடுகளை பார்த்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் அவற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின்நபின், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பேஸ்புக் பக்கத்தை நேரடியாக காண்பித்தது. பொதுமக்களும் அந்த பேஸ்புக் பக்கங்களை பின்தொடர்ந்து விட்டு செல்கின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக மேற்கொண்டுள்ள இந்த புதுமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.