கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள் – நயினார் நாகேந்திரன் கேள்வி..
அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர், நட்டநடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால், துறை எப்படி முன்னேறும்? அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி அதிகரிக்கும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் 26, 2026: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தமிழக அரசையும், உயர்கல்வித் துறை அமைச்சரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர், நட்டநடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால், துறை எப்படி உருப்படும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள்?
கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள்?
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் 181 அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள்… pic.twitter.com/yO51oJQ0bt
— Nainar Nagenthran (@NainarBJP) June 26, 2026
மேலும் அவர் பதிவில் கூறியிருப்பதாவது: “கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள்? பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஜூன் 18-ஆம் தேதிக்குள் அரசு கலைக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், போதிய மாணவர்கள் சேராததால் கலந்தாய்வு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும் பாதி இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பது, உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஆளும் அரசுக்கு வெட்கக்கேடான விஷயம்:
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என்று கருதி, மக்கள் அரசு கல்லூரிகளைப் புறக்கணித்து தனியார் கல்லூரிகளை நாடுவது, ஆளும் அரசுக்கு வெட்கக்கேடான விஷயமாகும்.
அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர், நட்டநடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால், துறை எப்படி முன்னேறும்? அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி அதிகரிக்கும்?
மேலும் படிக்க: மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம்.. டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
ஏற்கனவே திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை கடுமையான பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத காங்கிரஸிடம் அந்தத் துறையை ஒப்படைத்த முதலமைச்சர் திரு. விஜய், காங்கிரஸ் அமைச்சரின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், நமது பிள்ளைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகும்” என தெரிவித்துள்ளார்.