சென்னை, மே 11, 2026: தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று சட்டசபையில் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற நிலையில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் முதல்வர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். மேலும், புத்தகத்தையும் பரிசாக அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது துரை வைகோ, வாசலிலேயே முதலமைச்சர் விஜய்யை கட்டித்தழுவி வரவேற்றார். பின்னர், வைகோவும் அவரை கட்டித்தழுவி வரவேற்றார்.
மேலும் படிக்க: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய்.. கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்..
வைகோ வீட்டுப்பணிப்பெண்கள் செய்த செயல்:
இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் பேசிய அவர்கள், வைகோவின் வீட்டில் பணியாற்றி வரும் பணிப்பெண்களை முதல்வர் விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். அப்போது துரை வைகோ, “இவர்கள் எல்லோரும் விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள்” என குறிப்பிட்டார்.
முதல்வர் விஜய்யை சந்தித்த பணிப்பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் அவரைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது அதில் இருந்த ஒரு பெண், முதலமைச்சர் விஜயை பார்த்து, “ஊரார் கண்ணெல்லாம் முதலமைச்சர் விஜய் மீதுதான் உள்ளது” என்பது போன்று திருஷ்டி சுற்றினார். அதற்கு முதல்வர் விஜய்யும் பதிலுக்கு அந்த பெண்ணுக்கு திருஷ்டி சுற்றினார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு.. மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு..
ஒவ்வொரு பணிப்பெண்ணும் அவரை கும்பிட்டு மரியாதை செலுத்த, அவரும் திரும்பி வணக்கம் வைத்து மரியாதை தெரிவித்தார். மேலும், அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த காணொளி இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. முதல்வர் விஜயின் இந்த அரசியல் மாண்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.