சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி – வீட்டு பணியாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
Gold Coin Scam: நடிகர் சூர்யாவிடம் தனி பாதுகாவலராக பணியாற்றி வருபவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு. இவர் சூர்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் சுலோச்சனா மற்றும் அவரது மகன் பாலாஜி ஆகியோர் குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறியதை நம்பி ரூ.42 லட்சத்தை இழந்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் (Suriya) தனிப்பட்ட பாதுகாவலரிடம் தங்க நாணயம் குறைந்த விலையில் தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில், அவர் வீட்டில் பணியாற்றிய பெண் அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தோணி ஜார்ஜ் பிரபு என்பவர் சென்னை ஆயுதப் படைப்பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் 2021 முதல் நடிகர் சூர்யாவின் தனிப்பட்ட பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அவர் சூர்யா வீட்டில் வேலை பார்த்த சுலோச்சனா என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. குறைந்த விலையில் தங்கம் தருவதாக சுலோச்சனா சொல்லியதை நம்பி ரூ.42 லட்சத்தை இழந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
என்ன நடந்தது?
நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலராக இருப்பவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு. இவர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றும் சுலோச்சனா என்பவரின் மகன் பாலாஜியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. பாலாஜி தற்போது தங்க நாணய திட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி தனது தங்க நாணய திட்டத்தில் சேர சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தையை உண்மை என நம்பிய அந்தோணி முதலில் கடந்த ஜனவரி 2025ன் போது முதற்கட்டமாக ரூ.1.92 லட்சத்தை பாலாஜியின் வங்கி கணக்கில் செலுத்தியிருக்கிறார்.
இதையும் படிக்க : பணம் கொடுக்கல் – வாங்கல் தகராறு.. பாரில் ஒருவர் கொலை!
பின்னர் கடந்த மார்ச், 2025ல் தன்னிடம் உள்ள மொத்த தொகையான ரூ.46.87 லட்சத்தை பாலாஜியின் வங்கி கணக்கில் செலுத்தியிருக்கிறார். இதில் அவர் தனது தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்காக வாங்கிய பெர்சனல் லோன் தொகை, மற்றும் உறவினர்களிடம் இருந்து பெற்ற கடன் ஆகியவையும் அடங்கும். இதனையடுத்து மொத்தமாக பாலாஜியின் கணக்கில் அந்தோணி ரூ.50.37 லட்சம் பணத்தை செலுத்தியிருக்கிறார்.
ரூ.42 லட்சம் மோசடி
இந்த நிலையில் பணத்தை செலுத்திய அந்தோணி, பாலாஜியிடம் தங்க நாணயம் கேட்டிருக்கிறார். ஆனால் பாலாஜி தொடர்ந்து தங்க நாணயம் தராமல் ஏதேதோ காரணங்கள் சொல்லி சமாளித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பல முறை அந்தோணி அழுத்தம் கொடுக்க ரூ.7.91 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்திருக்கிறார். மீதமுள்ள ரூ.42 லட்சத்தை வழங்காததால் அதிர்ச்சியடைந்த அந்தோணி மாம்பலம காவல் நிலையத்தில் பாலாஜி மீதும் அவரது தாய் சுலோச்சனா மீதும் புகார் அளித்தார்.
இதையும் படிக்க : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு… சினிமா இயக்குநர் உட்பட 4 பேர் கைது – சென்னையில் அதிர்ச்சி
4 பேர் கைது
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலாஜி மற்றும் அவரது தாய் சுலோச்சனா, பாலாஜியுடன் செயல்பட்டு வந்த பாஸ்கர், விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.