Edappadi Palaniswami: நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் பாஜகவுடன் கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!
2026 TN Election Campaign: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைத்தார். அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உறுதியளித்த அவர், திமுகவின் ஆட்சியை விமர்சித்தார். நெசவாளர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடிய எடப்பாடி, பாஜக கூட்டணியை நியாயப்படுத்தினார். அதிமுகவின் முந்தைய ஆட்சியைப் புகழ்ந்து, 2026ல் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றார்.

மேட்டுபாளையம், ஜூலை 7: 2026 சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Elections Tamil Nadu) நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் தேர்தல் வியூகங்களை அதிதீவிரமாக வகுத்து வருகின்றனர். இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற வாசகத்துடன் தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் உள்ள வனப் பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு, தனியார் திருமண மண்டபத்தில் நெசவாளர்கள், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பெருமிதம்:
மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மேட்டுப்பாளையத்தில் மக்களின் எழுச்சியிலும், மக்கள் வெள்ளத்திலும் நீந்தி வந்ததுபோல் நீந்தி வந்து உங்களை சந்திக்கின்றோம். ஸ்டாலின் அவர்களே இந்த கூட்டத்தை பார்த்து உங்களுக்கு ஜூரம் வரப்போகுது நினைக்கிறேன். ஆகையால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தும். அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும்.




மக்களாட்சி நடைபெறும், தீய சக்தி திமுகவை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவோம், வெற்றி பெறுவோம். நல்லாட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வருவோம், எப்படி அதிமுக, பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைக்கிறீர்கள் என்று இன்றைய தினம் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். ஸ்டாலின் அவர்களே! உங்களுக்கு ஞாபக மறதி இருக்கிறது என்று கருதுகிறேன். 1999ல் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தீர்களா..? இல்லையா..? மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை, கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி. இதை தவிர்த்து உங்களால் வேறு எதுவும் கூற முடியாது.
அதிமுக பொற்கால ஆட்சி:
அதிமுக பொதுச் செயலாளர் பேச்சு #admk | #EdappadiPalaniswami | #dmkfails | #mkstalinfails | #newsj pic.twitter.com/YQfjozLrtT
— NewsJ (@NewsJTamil) July 7, 2025
அதிமுக கடந்த 2011ம் ஆண்டு 2021ம் ஆண்டு வரை சிறப்பான ஆட்சியை கொடுத்தது. இது பொற்கால ஆட்சி. எங்கள் ஆட்சியில் திமுக கட்சியால் எந்த குறைகளையும் கூற முடியவில்லை. 2026ல் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது, பகல் கனவாகத்தான் இருக்கும். பாஜக கட்சி மதவாத கட்சியல்ல, நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.