வீடு இடிந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய அண்ணன்-தம்பி… தாத்தா கண் முன்னே நேர்ந்த சோகம்!
2 Children Killed In Vandavasi: திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில், அந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி அண்ணன் தம்பி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

வந்தவாசியில் வீடு இடிந்து இரு சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள வழுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு, அபினேஷ் (16 வயது), முகேஷ் (14 வயது) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 11 மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் இளங்காடு பகுதியில் உள்ள தனது தாத்தா முனியன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, முனியன் குடியிருந்து வரும் அரசு தொகுப்பு வீட்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி இன்று காலை நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீடுகளின் இடிபாடுகளுக்குள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதில், வலி தாங்க முடியாமல் இருவரும் அலறல் சத்தம் போட்டனர். அப்போது, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய 2 சிறுவர்கள்
மேலும், இந்த விபத்து குறித்து வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வந்தவாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த இரு சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், வீட்டின் கட்டட இடிபாடுகளை அகற்றும் முயற்சி சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வளிமண்டல காற்று சுழற்சி.. 5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..
உயிருக்கு ஆபத்தான நிலையில்…
இதன் பின்னர், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோரை போலீசார் மீட்டு அவசர உறுதி மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த நிலையில், சிறுவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அண்ணன்-தம்பி உயிரிழந்த சோக சம்பவம்
இதைத் தொடர்ந்து, வந்தவாசி போலீசார் இரு சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் தந்தை மோகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு தொகுப்பு வீட்டில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வீடு இடிந்து விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: வீடுகளில் நாய் வளர்க்கிறீர்களா…ரூ.5000 அபராதம்…சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு!