Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிவேக சதம் – இங்கிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi Record Knock : இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் வெறும் 52 பந்துகளில் சதம் அடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார். 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்து வரும் இந்த இளம் இந்திய வீரர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

அதிவேக சதம்  – இங்கிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 05 Jul 2025 22:13 PM

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi). இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது அடுத்த தலைமுறை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர் ஒருநாள் போட்டிகளில், வேகமாக சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி (India Cricket Team) தற்போது இங்கிலாந்து (Engliand) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரில், 14 வயது  வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்தத் தொடரின் நான்காவது ஒருநாள் போட்டியில், வைபவ் 190க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அற்புதமான சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் அவர் 40 ரன்களைக் கடந்து அசத்தியிருக்கிறார்.

அதிவேக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

இங்கிலாந்தின் நியூ ரோடு மைதானத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக செயல்பட்டார். போட்டியின் தொடக்கத்திலிருந்தே அவர் மிக வேகமாக ரன்கள் எடுத்தார். அவரது பேட்டில் இருந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறந்தன. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி தனது சதத்தை அடிக்க வெறும் 52 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். இதில் 10 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம், 19 வயதுகுட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு எந்த வீரரும் ஒருநாள் போட்டியில் இவ்வளவு விரைவாக சதம் அடித்ததில்லை.

வைபவ் சூர்யவன்ஷியின் சதம் குறித்து பிசிசிஐ வெளியிட்ட எக்ஸ் பதிவு

 

இந்தப் பட்டியலில் தற்போது 19 வயதுக்குட்பட்டோர் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளார். 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 52 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இந்த அற்புதமான ஆட்டத்தின் மூலம், வைபவ் முன்பு கம்ரான் குலாம் வைத்திருந்த சாதனையை முறியடித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் 53 பந்துகளில் சதம் அடித்து, குலாம் அந்த நேரத்தில் வேகமான சதத்தை அடித்தார்.

இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் வீரர் தமீம் இக்பாலும் இடம்பிடித்துள்ளார். கடந்த 2005-06 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர், 68 பந்துகளில் சதம் அடித்தார். மேலும், 2021-22ல் உகாண்டா அணிக்கு எதிராக இந்தியாவின் ராஜ் அங்கத் பாவா 69 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதே போல கடந்த 2001-02 ஆம் ஆண்டில் கென்யா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் அதே 69 பந்துகளில் சதம் அடித்து இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார்.

வைபவ் சூர்யவன்ஷியன் தொடர் சாதனைகள்

முன்னதாக, ஜூலை 2 ஆம் தேதி நார்தாம்ப்டனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், வைபவ் 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 9 சிக்ஸர்களையும் 6 பவுண்டரிகளையும் அடித்தார். இதன் காரணமாக, மழை காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில், இந்தியா 269 ரன்கள் என்ற இலக்கை வெறும் 34.3 ஓவர்களில் எட்டியது. அவரது இன்னிங்ஸ் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தொடரில் 2-1 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தது. அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இதுவரை அருமையாக உள்ளது. இந்தத் தொடரில் அவர் விளையாடிய ஒவ்வொரு இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் ஜொலித்தார். இந்தத் தொடரின் முதல் போட்டியில் அவர் 48 ரன்கள் எடுத்தார். பின்னர் இரண்டாவது போட்டியில் 45 ரன்கள் எடுத்தார். அவர் மீண்டும் 86 ரன்கள் எடுத்தார். இப்போது அவரும் ஒரு சதம் அடித்துள்ளார்.