IPL 2025 Final: ஆர்சிபிக்கு கண்ணு பட போகுது! காரை சுற்றி மிளகாய், எலுமிச்சை கட்டிய ரசிகர்.. பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு!

RCB vs PBKS: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மோதின. 17 ஆண்டுகால வெற்றியற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக பிரார்த்தனை செய்தனர். விராட் கோலியின் மெதுவான ஆட்டம் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஆர்சிபி ரசிகர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கை குறிப்பிடத்தக்கது.

IPL 2025 Final: ஆர்சிபிக்கு கண்ணு பட போகுது! காரை சுற்றி மிளகாய், எலுமிச்சை கட்டிய ரசிகர்.. பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு!

பைனலில் விளையாடிய விராட் கோலி

Published: 

03 Jun 2025 21:34 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக திருவிழாபோல் நடைபெற்றநிலையில் 2025 ஜூன் 3ம் தேதியான இன்றுடன் முடிவடைய இருக்கிறது. இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் 17 ஆண்டுகால சாம்பியன் பட்ட வறட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.

கடுமையாக பிரார்த்தனை செய்யும் ஆர்சிபி ரசிகர்கள்:

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர ரசிகர்கள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது காரை சுற்றி முழுவதும் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயால் அலங்காரம் செய்துள்ளார். இது தீய கண் மற்றும் கெட்ட சக்திகளை விரட்டும் என்பது இந்தியாவில் நம்பிக்கையாக உள்ளது. அதை தொடர்ந்து, இந்த காரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கொடிகளும் இடம்பெற்றுள்ளன.

3 முறை இறுதிப்போட்டி, 3 முறையும் தோல்வி:

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025க்கு முன்னதாக இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதாவது 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இந்த 3 முறையும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கி, அபார பார்மில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மெதுவான இன்னிங்ஸ் விளையாடி அவுட்டானார். இந்த போட்டியில் விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 35 பந்துகளை சந்தித்து வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்து, 122.86 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இதனால் சமூக ஊடகதளத்தில் விராட் கோலி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.