IPL 2025 Closing Ceremony: ஐபிஎல் 2025 பைனலில் இந்திய இராணுவத்தினருக்கு கௌரவம்.. தேசபக்திப் பாடல்களை பாடி அசத்திய ஷங்கர் மகாதேவன்!

Shankar Mahadevan: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கு முன்னர், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஷங்கர் மகாதேவன் மற்றும் அவரது குழுவினர் தேசபக்திப் பாடல்களைப் பாடி இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 'வந்தே மாதரம்' உள்ளிட்ட பாடல்களைப் பாடி, சிவம் மற்றும் சித்தார்த் மகாதேவனுடன் இணைந்து அற்புதமான நிகழ்ச்சியை வழங்கினர். இந்தியக் கொடியுடன் கூடிய நடனமும் நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியது.

IPL 2025 Closing Ceremony: ஐபிஎல் 2025 பைனலில் இந்திய இராணுவத்தினருக்கு கௌரவம்.. தேசபக்திப் பாடல்களை பாடி அசத்திய ஷங்கர் மகாதேவன்!

ஷங்கர் மகாதேவன்

Published: 

03 Jun 2025 20:48 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றதில்லை. எனவே, எந்த அணி கோப்பையை வென்றாலும், ஒரு புதிய அணி கோப்பையை ஏந்தும். இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் போட்டிக்கு முன்னதாக நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025ன் நிறைவு விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஷங்கர் மகாதேவன் தேசபக்தி பாடல்களை பாடி இந்திய இராணுவத்தினருக்கு கௌரவம் செய்தார்.

கலக்கிய ஷங்கர் மகாதேவன்:

ஷங்கர் மகாதேவன் இந்திய இராணுவத்தினருக்காக தேசிய பாடல்களை பாடும்போது, ஷங்கர் மகாதேவனின் மகன்கள் சிவம் மற்றும் சித்தார்த் மகாதேவனும் அவருடன் இணைந்து பாடி இந்திய ரசிகர்களை கவர்ந்தனர். தொடர்ந்து தொழில்முறை நடனக் கலைஞர்கள் ‘தேசியக் கொடி’ வடிவிலான ஆடைகளை அணிந்து நடனமாடி அசத்தினர். அதன்படி, ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்று வெற்றிக்கண்ட இந்திய இராணுவ வீரர்களுக்கும், இந்தியாவிற்கும் ஷங்கர் மகாதேவனும், அவரது குழுவினரும் சிறப்பு கௌரவத்தை பரிசளித்தனர்.

நிறைவு விழா:

ஐபிஎல் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இசைக்கலைஞர் ஷங்கர் மகாதேவனையும், அவரது குழுவினரையும் வரவேற்றபோது ஐபிஎல் 2025 நிறைவு விழா தொடங்கியது. தொடர்ந்து மேடைக்கு வந்த ஷங்கர் மகாதேவன் உட்பட அனைத்து கலைஞர்களும் ’ஜெய் ஹிந்த்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ உள்ளிட்ட உணர்ச்சிகரமான கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர், ’வந்தே மாதரம்’ பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியபோது ஸ்டேடியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் பாடியபோது பார்ப்போரை புல்லரிக்க செய்தது. இதனால், நரேந்திர மோடி ஸ்டேடியம் தேசபக்தியில் மூழ்கியது.

என்னென்ன பாடல்களை பாடினார் ஷங்கர் மகாதேவன்..?

வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து ஷங்கர் மகாதேவன் ‘மைன் ரஹுன் யா நா, பாரத் யே ரஹ்னா சாஹியே’, ‘ஏ வதன் மேரே அபத் ரஹே து’ மற்றும் ‘மா துஜே சலாம்’ போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடினார். அப்போது, இந்தியாவையும் இந்திய இராணுவத்தினரை கௌரவிக்கும் வகையில் ஹெலிகாப்டர்களில் தேசியக் கொடி கம்பீரமாக பறக்கவிடப்பட்டது.