Asia Cup 2025: ஆசியக் கோப்பையை தவிர்க்க விரும்பும் பிசிசிஐ.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்காதா..?
India vs Pakistan: இந்தியா-பாகிஸ்தான் அரசியல் பதற்றத்தால் 2025 ஆசியக் கோப்பை இந்தியாவின் பங்கேற்பு கேள்விக்குறியாக உள்ளது. BCCI-யின் எதிர்ப்பு காரணமாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்த பரிசீலிக்கிறது. 2023 கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. டி20 வடிவத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, அரசியல் பிரச்னைகளைத் தவிர்க்கும் முயற்சியாகும்.

ரோஹித் சர்மா - முகமது ரிஸ்வான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் (India – Pakistan Tension) காரணங்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக, 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுகிறது. இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதை விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்து வருதவதாக செய்திகள் வெளிவருகிறது. இது 2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) போட்டியின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறது. இருப்பினும், அனைத்து அணிகளின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.
2025 ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடுமா?
அரசியல் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 ஆசியக் கோப்பை போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 2025 ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையானது தற்போது இந்தியாவிடம் உள்ளது. அதேநேரத்தில், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக பாகிஸ்தான் ஹைபிரிட் மாடல் முறையில் நடுநிலை இடத்தை கட்டாயப்படுத்தலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்விதான், தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆர்வம் காட்டி வருவதாகவும், அதேநேரத்தில் இந்திய அணி பங்கேற்பு குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
டி20 வடிவத்தில் 2025 ஆசியக் கோப்பை:
As par reports UAE will be hosting Upcoming Asia cup 2025 in September. pic.twitter.com/NRTUQCd9YU
— ACB Xtra (@acb_190) June 16, 2025
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்ட 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் நடத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பை முழுவதும் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விருப்பம் காட்டாததால் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டது. இந்த முறை, இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், போட்டியை முழுவதுமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கலாம்.
2023 ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்:
2023 ஆசியக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2023 ஆசியக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டி தகுதி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொழும்பில் இலங்கை அணிக்கு எதிராக முகமது சிராஜ், 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக, இலங்கை அணி 50 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து, இந்தியா 6.1 ஓவர்களில் இலக்கைத் துரத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.