Video : பயிற்சியின் போது விபத்து – வீரர் மீது ஏறிய பிட்ச் ரோலர்.. நடந்தது என்ன?
Pitch Roller Accident : கவனக்குறைவு காரணமாக விளையாட்டு பயிற்சிகளின் போது அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில விபத்துகள் மிக குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில விபத்துகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் வீரர் ஒருவர் மீது பிட்ச் ரோலர் ஏறி விபத்துக்குள்ளானது
விளையாட்டு மைதானத்தில் விபத்துகள் எல்லா நேரங்களிலும் நடக்கின்றன. ஆனால், ஒரு வீரர் மீது மைதான உருளை ஏறிச் சென்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? பயிற்சியின் போது ஆண்ட்ரோஸ் டவுன்சென்டுக்கு அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. முன்னாள் பிரீமியர் லீக் மற்றும் இங்கிலாந்து விங்கரான ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட், பயிற்சியின் போது மைதான உருளையால் தாக்கப்பட்டு, ஒரு கோரமான விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக, டவுன்சென்ட் அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் தாய் லீக்கில் நடந்தது, அங்கு டவுன்சென்ட் பி.டி. பிரசுவாப் அணியில் அங்கம் வகித்து வந்தார்.
பிட்ச் ரோலர் விபத்து நடந்தது எப்படி?
35 வயதான டவுன்சென்ட், முந்திச் செல்லும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு பிட்ச் ரோலரின் பாதையில் கால் வைத்தார். அந்த மோதலால் அவர் கீழே விழுந்தது மட்டுமல்லாமல், அவரது இடது கால் அந்த ரோலருக்கு அடியில் சிக்கிக்கொண்டது. இந்தக் காட்சியைக் கண்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாக பிட்ச் ரோலரை நிறுத்திவிட்டு, ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட்டிற்கு உதவ விரைந்தார்.
வீடியோ
View this post on Instagram
பெரிய பாதிப்பு ஏற்படுதற்கு முன்பே பிட்ச் ரோலர் நிறுத்தப்பட்டதாலும், கீழே மண் இருந்து பெரிய அழுத்தம் கிடைக்காததனாலும் அவருக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படவில்லை. பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து மூலம் டவுன்சென்டுக்கு எந்தப் பெரிய காயங்களும் ஏற்படவில்லை. கூடுதல் நேரத்தில் அவர் மாற்று வீரராகக் களமிறங்கினார். டவுன்சென்டின் அணியான பி.டி. பிரசுவாப், பட்டானி எஃப்.சி. அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தாய்லாந்து லீக்கில் டவுன்சென்டின் இரண்டாவது சீசன்
ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட் தாய் லீக்கில் தனது இரண்டாவது சீசனில் விளையாடி வருகிறார். இதற்கு முன்பு அவர் 2025-26 சீசனில் காஞ்சனபுரி பவர் அணிக்காக விளையாடினார். மேலும் அவர் டோட்டன்ஹாம், நியூகாசில், கிரிஸ்டல் பேலஸ் மற்றும் எவர்டன் போன்ற கிளப்புகளுக்காகவும் விளையாடியுள்ளார். இருப்பினும், தாய் லீக்கில் ஆண்ட்ரோஸ் டவுன்சென்டுக்கு நேர்ந்தது போன்ற ஆபத்தான மற்றும் பயங்கரமான ஒரு விபத்து, கால்பந்து மைதானத்தில் அரிதாகவே காணப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அந்தச் சம்பவம் தீவிரமான ஒன்றாக மாறவில்லை.