AB de Villiers Wheelchair Cricket: மாற்று திறனாளிகளுடன் இணைந்து வீல் சேரில் கிரிக்கெட்.. ரசிகர்களை கவர்ந்த ஏபி டி வில்லியர்ஸ்!

Wheelchair Cricket Mumbai: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், மும்பை சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியுடன் விளையாடி அவர்களை ஊக்குவித்தார். புராஜெக்ட் மும்பை திட்டத்தின் கீழ் நடந்த இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் மாற்றுத்திறனாளிகளின் திறமையை பாராட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

AB de Villiers Wheelchair Cricket: மாற்று திறனாளிகளுடன் இணைந்து வீல் சேரில் கிரிக்கெட்.. ரசிகர்களை கவர்ந்த ஏபி டி வில்லியர்ஸ்!

ஏ பி டிவில்லியர்ஸ்

Published: 

01 Jun 2025 16:14 PM

தென்னாப்பிரிக்கா நட்சத்திர கிரிக்கெட் வீரரும், விராட் கோலியின் (Virat Kohli) நெருங்கிய நண்பருமான ஏபி டி வில்லியர்ஸ் (AB de Villiers) மிகவும் எளிமைக்கு பெயர்போன ஒரு பிரபலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் தெருவோர டீக்கடையில் ஒன்றில் அமர்ந்து எளிமையாக டீ குடித்தார். அப்போது, அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து, தற்போது, மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சக்கர நாற்காலி அமர்ந்தபடி, கிரிக்கெட் (Wheelchair Cricket) விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், மாற்று திறனாளி வீரர்களின் திறமையையும், மன உறுதியையும் பாராட்டினார்.

நெகிழ்ச்சி தருணம்:

மும்பையின் சர்க்கர நாற்காலி கிரிக்கெட் அணியுடன் மரைன் லைன்ஸில் உள்ள இஸ்லாம் ஜிம்கானாவில் புராஜெக்ட் மும்பை என்ற திட்டத்தின் கீழ் மும்பை சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் பயிற்சி அமர்வுகளில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பங்கேற்றார். அப்போது, அவர் மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடியது மட்டுமல்லாமல், எந்தவித தயக்கமும் இன்றி சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி வழக்கம்போல் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்தநிலையில், ஏபி டி வில்லியர்ஸ் செய்த இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

டிவில்லியர்ஸ் விளையாடிய காட்சி:

புராஜெக்ட் மும்பையின் பிராண்ட் அம்பாசிடராக இருந்துவரும் ஏ பி டிவில்லியர்ஸ் இதுகுறித்து பேசுகையில், “ மும்பை எனக்கு பல ஆண்டுகளாக நிறைய அன்பை கொடுத்துள்ளது. இன்று நான் ஒரு கிரிக்கெட் வீரராக அல்ல, ஒரு தன்னார்வலராக இங்கு வந்துள்ளேன். குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் இந்த நம்பமுடியாத நகரத்திற்கு இதை ஒரு சிறந்த இடமாக மாற்ற மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பெங்களூரு அணிக்கு முழு சப்போர்ட்:

ஒரு காலத்தில் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ், இன்று வரை அந்த அணிக்கு முழு ஆதரவை கொடுத்து வருகிறார். சமீபத்தில் ESPN Cricinfoவில் பேட்டியளித்த ஏபி டி வில்லியர்ஸ், “ஐபிஎல்லில் கோப்பையை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முழு பலத்துடன் சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறது. விராட் கோலி ஈ சாலா கப் நம்தே என்று சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறியுள்ளார். ஆனால், இது எங்கள் சீசன் என்று நான் உறுதியாக நம்புகிறேன் இந்த முறை ஆர்சிபி நிச்சயம் கோப்பையை வெல்லும். அந்த தருணத்திற்காக காத்திருக்கிறோம்” என்றார்.