Palani: களைகட்டும் பழனி.. வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினசரி சுவாமி வீதி உலா, திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஜூன் 8 அன்று திருக்கல்யாணமும், ஜூன் 9 அன்று திருத்தேரோட்டமும் நடைபெறும்.

பழனி கோயில்
வைகாசி விசாக திருவிழாவை (Vaikasi Visakam) முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் (Palani Murugan temple) கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழாவானது தொடங்கியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் மட்டும் அறுபடை வீடுகள் உள்ளது. முருகப்பெருமானின் பிறப்பு முதல் போர், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு இடத்திலும் நடந்ததை குறிக்கும் வகையில் இந்த அறுபடை வீடுகள் அமைந்துள்ளது. இதனிடையே 2025ம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை முருகப்பெருமான் அவதரித்த தினமாக கருதப்படும் வைகாசி விசாகம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் முருகனின் 3ஆம் படை வீடான பழனியில் 2025, ஜூன் 3 ஆம் தேதியான இன்று வைகாசி விசாக திருவிழா தொடங்கியுள்ளது.
10 நாட்களும் கொண்டாட்டம் தான்
பழனி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வழக்கமாகவே தினம்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்லும் பழனியில் இந்த பத்து நாட்களும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். என்னதான் மலை மேல் இருக்கும் முருகனுக்கு பல்வேறு விசேஷ தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அவற்றின் தொடக்கம் மலையடிவாரத்தில் இருக்கும் திரு ஆவினன்குடி தலத்தில் காட்சியளிக்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து தான் தொடங்கும்.
அந்த வகையில் வைகாசி விசாகத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வைகாசி விசாக நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது பழனியில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவதாகும்.
திருக்கல்யாணம், திருத்தேரோட்டம்
இந்த பத்து நாட்கள் திருவிழாவில் தினமும் சுவாமி வீதியுலா வருவது, தொடர்ந்து திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக பழனி மலையை சுற்றிலும் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பழனி கிரிவலப் பாதை தொடங்கி அனைத்து இடங்களிலும் காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்து நாட்களில் சுவாமி சப்பரம், தந்த பல்லாக்கு, தங்கக்குதிரை, வெள்ளி யானை, ஆட்டு கிடா, காமதேனு, வெள்ளி மயில், தங்க மயில், தோளுக்கினியாள் போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ளது. அன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
இதன் பின்னர் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் 2025 ஜூன் 9ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து நாட்களும் பக்த சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை கச்சேரி, நாட்டுப்புற பாடல்கள் என பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் பெரியநாயகி அம்மன் கோவில் நடைபெறும். ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாளில் திரு ஊடல் நிகழ்ச்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.