உங்கள் பேச்சு எப்படி இருக்கும்? ஜாதகத்தில் இதற்கும் காரணம் இருக்கிறதா?
Horoscope Astrology: ஜாதகத்தில் புதன், சந்திரன், குரு, செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகள் ஒருவரின் பேச்சு முறையுடன் தொடர்புடையதாக ஜோதிடம் கூறுகிறது. புதன் மற்றும் குருவின் சாதகமான அமைப்பு தெளிவான, இனிமையான பேச்சையும், செவ்வாய் மற்றும் சூரியனின் தாக்கம் நேரடியான மற்றும் தைரியமான பேச்சையும் குறிக்கலாம் என நம்பப்படுகிறது.
ஒருவரின் பேச்சு நடை, அவர் கருத்துகளை வெளிப்படுத்தும் விதம், தயக்கமின்றி பேசும் தன்மை அல்லது மனதில் இருப்பதை வெளிக்காட்டாமல் இருக்கும் குணம் என அனைத்திலும் ஜாதக அமைப்புகள் தாக்கம் செலுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. சிலர் மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாகக் கூறுவார்கள். இன்னும் சிலர் தங்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். ஒருவருடைய பேச்சு இனிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறதா அல்லது நேரடியாகவும் கடுமையாகவும் இருக்கிறதா என்பதற்கும் கிரகங்களின் நிலையை ஜோதிடத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.
புதனின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் அறிவு, சிந்தனை மற்றும் பேச்சுத் திறனுக்கான முக்கிய கிரகமாக புதன் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலிமையாக இருந்தால், ஒருவர் புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் புதனுடன் இணையும் கிரகங்கள், அதன் மீது விழும் பார்வைகள் மற்றும் ஜாதகத்தின் ஒட்டுமொத்த அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து பேச்சின் தன்மை மாறக்கூடும். சந்திரன் மற்றும் புதன் இடையே நல்ல தொடர்பு இருந்து, குருவின் சாதகமான பார்வையும் கிடைத்தால் மனதில் இருப்பதை மறைக்காமல் இயல்பாக பேசும் தன்மை அதிகரிக்கும் என ஜோதிடக் கருத்துகள் தெரிவிக்கின்றன.
நேர்மையான பேச்சு
புதன் வலுவான நிலையில் இருப்பதுடன் குருவின் சாதகமான தொடர்பும் இருந்தால், பேச்சில் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் நல்லெண்ணம் வெளிப்படலாம். அதேபோல், ஜாதகத்தில் இரண்டாம் பாவம் மற்றும் மூன்றாம் பாவம் வலிமையாக இருந்தால், தன்னுடைய கருத்துகளை பயமின்றி வெளிப்படுத்தும் தைரியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிப்படையாகப் பேசுவது மட்டுமே போதுமானதல்ல; யாரிடம், எந்த சூழலில், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேச வேண்டும் என்ற புரிதலும் அவசியம். அப்போதுதான் நேர்மையான பேச்சு பிறருக்கு மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
செவ்வாய் மற்றும் சூரியனின் தாக்கம்
புதனுடன் செவ்வாய் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது சூரியன், செவ்வாய் ஆகியவை புதனுடன் சாதகமான தொடர்பில் இருந்தாலோ, மனதில் தோன்றியதை நேரடியாகவும் தைரியமாகவும் கூறும் தன்மை ஏற்படலாம் என ஜோதிடம் கூறுகிறது. இத்தகையவர்கள் தங்கள் கருத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவதால் சில நேரங்களில் அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களுக்கு கடுமையாகத் தோன்ற வாய்ப்புள்ளது. குறிப்பாக சந்திரனுடன் தொடர்புடைய இடங்களில் செவ்வாயின் தாக்கம் இருந்தால், அதிகம் யோசிக்காமல் உடனடியாகப் பேசும் குணமும் இருக்கலாம். இதனால் உறவுகளில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உருவாகாமல் இருக்க பேச்சில் நிதானம் தேவைப்படுகிறது.
Also Read: செப்டம்பர் மாதம் யாருக்கு ஜாக்பாட்? உங்கள் பிறந்த தேதி சொல்லும் அதிர்ஷ்ட ரகசியம்!
சனியின் தாக்கம்
சந்திரன் அல்லது ராசியுடன் சனி வலுவான தொடர்பு கொண்டிருந்தால், ஒருவர் தன்னுடைய எண்ணங்களை உடனடியாக வெளிப்படுத்தாமல் நன்றாக யோசித்த பிறகே பேசக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. சிலர் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாக வெளிப்படுத்தும் இயல்பையும் கொண்டிருக்கலாம். சனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கருதப்படும் சில ஜாதக அமைப்புகளில், பேச்சில் எச்சரிக்கை, தயக்கம் அல்லது பிடிவாதம் போன்ற குணங்கள் காணப்படலாம். இருப்பினும், இதுபோன்ற பலன்கள் தனிப்பட்ட ஒரு கிரக நிலையை மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை; முழு ஜாதக அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ராகு – கேதுவின் தொடர்பு
புதன் அல்லது இரண்டாம் பாவமான வாக்கு ஸ்தானத்துடன் ராகுவின் தொடர்பு இருந்தால், சூழ்நிலைக்கு ஏற்ப பேசும் தன்மை உருவாகலாம் என ஜோதிடக் கருத்துகள் தெரிவிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் கருத்துகளை மாற்றி வெளிப்படுத்தும் போக்கும் காணப்படலாம். கேதுவின் தொடர்பு இருந்தால், தன்னுடைய வார்த்தைகளால் தேவையற்ற சிக்கல்களை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இவை ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான விளக்கங்களே தவிர, ஒருவரின் குணத்தை உறுதியாக நிர்ணயிக்கும் அறிவியல் அளவுகோல் அல்ல.
பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஜாதக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.