Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சபரிமலைக்கு மாலை அணிகிறீர்களா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்..

மாலை அணிந்தவுடன் “ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்ற நாமஸ்மரணை தினமும் சக்தியுடன் ஜபிக்க வேண்டும். பக்தர்கள் காலை–மாலை குளித்து, திருநீறு, சந்தனம் அணிந்து, எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவர். நோன்பு, சத்துவ உணவு, கோபமின்மை, பொறுமை, கருணை, தன்னடக்கம் போன்ற நல்ல குணங்களை வளர்ப்பதே இந்த விரதத்தின் நோக்கம்.

சபரிமலைக்கு மாலை அணிகிறீர்களா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்..
சபரிமலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Nov 2025 16:51 PM IST

கார்த்திகை மாதம் வந்தாலே அனைவரின் நினைவுகளிலும் முதலில் தோன்றுவது சபரிமலை ஐயப்பனும், பக்தர்கள் அணியும் மாலையும் தான். இந்த புனிதமான மாதத்தில் இந்தியா முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், ஆன்மிக ஒழுக்கம், தன்னடக்கம், பக்தி ஆகியவற்றை முன்வைத்து மாலை அணிந்து விரதத்தை ஆரம்பிப்பார்கள். மாலை அணிதல் என்பது ஒருசாதாரண வழிபாட்டு முறையல்ல; அது மனதைச் சுத்தப்படுத்தும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாக கருதப்படுகிறது. அப்படி, சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் செய்ய வேண்டியதும், செய்யகூடாதவை குறித்தும் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ஆத்ம ஞான மையம் எனும் யூட்யூப் சேனலில் அவர் கூறியதாவது, சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைச் சுத்தப்படுத்தும் விதமாக விரதம் அனுஷ்டிப்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. யாத்திரையின் முதற் கட்டமாக மாலை அணிதல் தொடங்குகிறது. பொதுவாக 48 நாட்கள் மண்டல விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாய் இருந்தாலும், இயலாத சூழலில் 30 நாட்கள் அல்லது குறைந்தது 24 நாட்கள் வரை விரதம் இருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன் மாலை அணிந்து நெற்றி சாயம் மட்டும் வைத்து செல்லும் நடைமுறை முறையாகாது; விரதத்தின் நோக்கம் தன்னடக்கத்தை வளர்த்தல் என்பதால் அவ்வகை காலத்துக்கு ஒழுங்கு அவசியம் என்று கூறியுள்ளார்.

Also Read : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

குருசாமி வழிகாட்டல்:

மாலை அணிதல் பெரும்பாலும் குருசாமியின் வழிகாட்டுதலின் படியே செய்யப்படுகிறது. துளசி அல்லது ருத்ராட்ச மாலையை அணிந்தபின், தினமும் காலை – மாலை குளித்து, விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து 108 சரணங்கள் ஜபம் செய்வது கட்டாயமான ஆன்மிக ஒழுக்கமாக கருதப்படுகிறது. பயணத்திலும் கூட மனத்தில் ஜபிக்கலாம்; வழிபாட்டிற்கு சிறப்பு இடம் தேவை இல்லை.

சைவ உணவுகள் மட்டுமே:

விரதத்தின்போது உணவு மிகச் சத்துவமாக இருக்க வேண்டும். முழுக்க சைவ உணவுகள் மட்டுமே உகந்தவை. உடல் நிலைக்கு ஏற்ப காலை–மாலை எளிய உணவு எடுத்துக்கொண்டு, ஒரு வேளை உபவாசம் கடைப்பிடித்தல் மன கட்டுப்பாட்டிற்கு உதவும். மாலை அணிந்தபின் செருப்பு அணியாதது சிறந்தது; ஆனால் வேலை காரணமாக அவசியமான நேரங்களில் மட்டும் அணியலாம்.

உடையிலும் எளிமை:

உடையிலும் எளிமை முக்கியம்; காவி, கருப்பு அல்லது நீலம் போன்ற நிறங்களில் ஆடைகள் அணிவது பக்தியை சுட்டிக்காட்டுகிறது. வீட்டில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கும் நாட்களை கருத்தில் கொண்டு மாலை அணிவது சிறந்தது.

குணாதிசய மாற்றம்:

யாத்திரையின் மிக முக்கிய பகுதி குணாதிசய மாற்றமே. கோபம், பொறாமை, வஞ்சனை, அநாவசிய பேச்சு போன்றவற்றை விட்டு விலகி, மென்மை, பொறுமை, கருணை போன்ற சத்துவ குணங்களை வளர்க்கும் காலமாக விரதம் பயன்படுத்தப்பட வேண்டும்.

Also Read : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!

ஆன்மீக கட்டுப்பாடு:

சபரிமலை யாத்திரை ஒரு உடல் பயணம் அல்ல; ஆன்மீக கட்டுப்பாட்டை உருவாக்கும் உயர்ந்த சாதனை. இந்த ஒழுக்கங்களை பின்பற்றி செல்லும் போது, ஐயப்பனின் தரிசனம் மேலும் புனிதமாக அமையும் என்கிறார்.

இவ்வாறு, கார்த்திகை மாதத்தில் மாலை அணிவது என்பது ஒரு சடங்காக அல்லாமல், ஒருவர் தன்னை ஆன்மிக ரீதியாக உயர்த்திக் கொள்ளும் ஒரு புனிதமான பயணம் ஆகும். இந்த விரத முறைகளை உண்மையுடன் கடைப்பிடிக்கும் போது, சபரிமலை யாத்திரை இன்னும் புனிதமானதாகவும், ஆனந்தமூட்டுவதாகவும் மாறுகிறது என்கிறார்.