சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு – அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Sabarimala Mandala Kalam : கேரளாவில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சாமி தரிசனம் செய்ய ஏராளமான மக்கள் குவிந்ததால் அந்த இடமே பக்தர்கள் கூட்டத்தால் அலை மோதியது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சபரிமலை (Sabarimala) கோயில் நடை நவம்பர் 16, 2025 அன்று மாலை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. கேரளாவில் (Kerala) சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு விழாவிற்காக கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயிலைத் திறந்தார். இதனையடுத்து நவம்பர் 17, 2025 திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு, விருச்சிகப்புலரியில் உள்ள சபரிமலை மற்றும் மாலிகாபுரம் கோயில்களின் நடை திறக்கப்படும். இதன் மூலம், இந்த ஆண்டுக்கான சபரிமலை யாத்திரை தொடங்கும். பின்னர், பக்தர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை கோவில் நடை திறப்பு
இதனையடுத்து டிசம்பர் 26, 2025 சபரிமலையில் சிறப்பு தீபாராதனை காட்டப்படும். பின்னர் டிசம்பர் 27, 2025 அன்று மண்டல பூஜை நடைபெறும். பின்னர் அன்று இரவு கோயில் நடைசாத்தப்படுவதுடன் மண்டல பூஜை முடிவடையும். பின்னர், மகரவிளக்கு விழாவின் ஒரு பகுதியாக டிசம்பர் 30, 2025 மாலை கோயில் மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு மஹோத்ஸவம் ஜனவரி 14 , 2025 அன்று நடைபெறும். பின்னர், ஜனவரி 19, 2025 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பின்னர் ஜனவரி 20 ஆம் தேதி காலையில் கோயில் மீண்டும் மூடப்படும்.
இதையும் படிக்க : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!
தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதிகள்
இக்காலக் கட்டங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். இதற்காக www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 70,000 பேர் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியும். ஸ்பாட் புக்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் சத்திரம், செங்கன்னூரில் ஸ்பாட் புக்கிங் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே நேரடியாக செல்வதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற முடியும்.
கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கோயில் நடை திறப்புக்காக மலையின் கீழே உள்ள திருமுட்டம் மற்றும் பந்தளத்தில் காத்திருந்தனர். தற்போதைய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, கோவிலின் நெய்விளக்கிலிருந்து ஒரு நூலை எடுத்துக்கொண்டு சன்னதியை அடைந்து சன்னதியில் விளக்கேற்றினார்.
இதையும் படிக்க : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!
பின்னர், நியமிக்கப்பட்ட சபரிமலை மேல்சாந்தி, இ.டி.பிரசாத் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி, மனு நம்பூதிரி ஆகியோரும் அருண்குமார் நம்பூதிரியின் கையைப் பிடித்துக் கொண்டு பதினெட்டாம் படி ஏறி சன்னதியை அடைந்தனர். இதனையடுத்து சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய தொடங்கினர்.



