சென்னையில் ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?
சென்னையின் நங்கநல்லூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஐயப்பன் தனக்கு இந்த இடத்தில் கோயில் அமைய வேண்டும் என விருப்பப்பட்டதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. சபரிமலைக்கு சென்று வழிபட்ட பின் இந்த ஐயப்பன் இந்த கோயிலில் எழுந்தருளினார் எனவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக சுவாமி ஐயப்பன் (Swamy Ayyappa) என்றாலே நம் அனைவருக்கும் சபரிமலை (Sabarimala) தான் நினைவுக்கு வரும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றான ஐயப்பனை காண ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்களும், கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் 48 நாட்களும் விரதமிருந்து இருமுடி கட்டி சரணகோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐயப்பனுக்கு என தனியாக கோயில் உள்ளது. அதே சமயம் அனைத்து கோயில்களிலும் ஐயப்பன் அருள் பாலித்தும் வருகிறார். இப்படியான நிலையில் சென்னை நங்கநல்லூரில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோயில் (Nanganallur Ayyappan Temple) பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
நங்கநல்லூர் என்றாலே நம் அனைவருக்கும் ஆஞ்சநேயர் கோயில் தான் நினைவுக்கு வரும். அந்த கோயிலுக்கு பின்பக்கமாக இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
இந்தக் கோயில் உருவானதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள பக்தர்களை குருசாமியாக இருந்து ஒரு ஐயப்ப பக்தர் சபரிமலைக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். அதன்படி விக்ரகம் செய்யப்பட்டு பல வருடங்களாக குரு சாமியாக அழைக்கப்பட்ட அந்த நபரின் இல்லத்தில் வைத்து அனைத்து பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால் அந்த ஐயப்பனுக்கு தனி கோயிலில் அமர வேண்டும் என்று விருப்பம் மேலோங்கியது. இது பலரது எண்ணத்திலும் உதிக்க கோயில் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில் ஒரு இடத்தில் கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் மனம் வருந்திய குருசாமி நேரடியாக சபரிமலையில் இருக்கும் மேல் சாந்தியை தொடர்பு கொண்டு விவரத்தை கூற தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.
அதில் ஐயப்பன் தான் கோயில் கொள்ள விரும்பும் இடமாக நங்கநல்லூர் இருந்தது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் அதற்கு முன்பாக சபரிமலைக்கு சென்று பம்பை நதியில் புனித நீராடி 18 படிகள் ஏறி தன்னையே தரிசனம் செய்துவிட்டு இங்கு கருவறையில் அமர்ந்து கொண்டார் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
கோயிலின் சிறப்புகள்
சபரிமலையில் இருக்கும் சன்னிதானம் பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அதேபோல் இந்த ஐயப்பன் கோயிலில் சன்னதி அமைந்துள்ளது. சபரிமலை போலவே இங்கும் ஐயப்பனுக்கு திருவாபரணம் கொண்டு வைபவம் நடக்கிறது. இந்த ஆபரணங்கள் அனைத்தும் பந்தல மகாராஜா அரண்மனையில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்பு எடுத்துவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவது எங்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சியாகும். கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் செப்பு கவுசத்தால் அமைக்கப்பட்டுள்ளது மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஐயப்பன், பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, மாளிகைபுரத்து அம்மன், நாகராஜர்,கொச்சு கடுத்த சுவாமி, வலிய கடுத்த சுவாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.
பங்குனி உத்திரம், கார்த்திகை மாதத்தில் பால்குடம் எடுக்கும் வைபவம், திருவீதி உலா, ஆராட்டு விழா என அனைத்து நிகழ்வுகளும் மிகக் கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக கார்த்திகை மாதம் முழுவதும் சூரிய பகவான் தனது கிரகணங்களை ஐயப்பன் மீது பாய்ச்சி அவனது அருளை பெற்று செல்வதாக நம்பப்படுகிறது. மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இந்த ஐயப்பன் கோயிலுக்கு பால்குடம் எடுத்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.
(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது)