AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadi Perukku: 2025 ஆடிப்பெருக்கு எப்போது?.. அந்நாளின் முக்கியத்துவம் தெரியுமா?

ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கியமான விழா, ஆடி மாதத்தின் 18-ம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும் நாள் இதுவாகும். நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்து மதத்தில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை இதுவாகும். விவசாயிகளுக்கு இது முக்கியமான நாளாகும்.

Aadi Perukku: 2025 ஆடிப்பெருக்கு எப்போது?.. அந்நாளின் முக்கியத்துவம் தெரியுமா?
ஆடிப்பெருக்கு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Jul 2025 09:13 AM IST

இந்து மதத்தை பொறுத்தவரை ஆன்மிக மாதம் முழுக்க மனிதர்களின் மனதில் ஆன்மிக சிந்தனை, இறையருள் போன்ற எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் பெரிதாக எந்தவொரு நல்ல காரியங்களும் செய்ய மாட்டார்கள். இப்படியிருக்கும் நிலையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி, சஷ்டி, ஆடிப்பூரம், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை, ஆடித்தபசு என எல்லா நாளுமே விஷேசமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆடி மாதத்தின் 18ம் நாள் “ஆடிப்பெருக்கு” என அழைக்கப்படுகிறது. இந்நாளில் நாம் நல்ல காரியங்கள் செய்தாலும், தொடங்கினாலும் அது மிகப்பெரிய அளவில் நன்மைகளை அளிக்கும் என சொல்லப்படுகிறது. அப்படியான புனிதமான நாளின் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

நாட்களின் அடிப்படையிலான ஒரே பண்டிகை

ஆடி மாதத்தின் 18 வது நாள் ஆடிப்பெருக்கு என அழைக்கப்படுகிறது. இந்நாளில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை குறிப்பதுதான் இந்நாளின் சிறப்பாகும். இது பதினெட்டாம் பெருக்கு, ஆடி 18, ஆடி நோம்பி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்து மதத்தின் விழாக்கள் பெரும்பாலும் நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகள் அடிப்படையில் கொண்டாடப்படுவது உண்டு. ஆனால் ஆடி மாதத்தின் 18-வது நாள் மட்டும் தான் நாட்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாகும்.

அதாவது தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையினால் ஆறுகளில் புது தண்ணீர் பொங்கி வரும். இதையே ஆற்றுப் பெருக்கு என அந்நாளில் அழைக்கப்பட்டு வந்தது. உழவர்கள் இந்த நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். நெல், கரும்பு ஆகியவற்றை இந்த மாதத்தில் விதைக்கும் பொழுது சரியாக ஆறு மாத காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்ய முடியும். அதனால் தங்கள் உழவுக்கு தெய்வமாக திகழும் வற்றாத நதிகளை போற்றி மகிழும் வகையில் இந்த ஆடிப்பெருக்கு நாளானது கொண்டாடப்படுகிறது.

Also Read: Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பெண்கள் சிறப்பு வழிபாடு

இந்த நாளில் மக்கள் ஆற்று படுகைகளில் கூடி வழிபாடு நடத்துகிறார்கள் குறிப்பாக பெண்கள் ஆற்றில் குளித்துவிட்டு அதன் கரையில் ஈரத் துணியுடன் வழிபாடு செய்து பலன்களை பெறுகின்றனர். மேலும் இந்நாளில் தாலி சரடு, தாலிக்கயிறு உள்ளிட்டவையும் மாற்றிக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் காவிரி கரையாற்றின் ஓரத்தில் ஆடி 18ம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

Also Read: Aadi Sunday: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?

2025ம் ஆண்டு ஆடிப்பெருக்கு எப்போது?

2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று தாங்கள் உயிர் வாழ தேவையான வாழ்வாதாரங்களில் ஒன்றான தண்ணீரை தருவதற்காக நன்றி செலுத்தலாம். இந்நாளில் வழிபாடு செய்வதால் வீட்டில் செல்வ வளம் பெருகும் எனவும், ஆற்று நீரை போல மகிழ்ச்சி பொங்கும் எனவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கை அடிப்படையிலான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us