மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
West Bengal Assembly Election 2026 | தமிழகம், கேரளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தேர்தலை அறிவித்தது. அதன்படி, இன்று மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொல்கத்தா, ஏப்ரல் 23 : மேற்கு வங்கத்தில் (West Bengal) இரண்டு கட்டங்களாக 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Election) நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission of India) அறிவித்தது. அதன்படி, அங்கு இன்று (ஏப்ரல் 23, 2026) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், காலை 6 மணிக்கு அங்கு மாதிரி வாக்குப்பதிவு உடன் தேர்தல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தேர்தலை அறிவித்தது. அப்போது மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல் 23, 2026 அன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவும், ஏப்ரல் 29, 2026 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : கேரளா பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி நிவாரணம் அறிவித்த மோடி!




மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயார் செய்தல் என தீவிர பணிகளை மேற்கொண்டன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே மிக கடுமையான போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாதிரி வாக்குப்பதிவுடன் தொடங்கிய சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவுடன் அங்கு தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமையுமா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைந்துள்ளது.
இதையும் படிங்க : கேரளா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 6 பேர் பலி.. உயிருக்கு போராடும் 8 பேர்?
வாக்குப்பதிவு மையங்களுக்கு நேற்று மாலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது.