இப்படியும் திருடுவாங்களா? வீட்டின் உள்ளே சுரங்கப்பாதை அமைத்து டீசலை திருடிய கும்பல்.. ஜெய்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
Diesel Theft: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தண்ணீர் வியாபாரம் செய்வதாக கூறி வீட்டின் உள்ளே சுரங்கப்பாதை அமைத்து டீசலை திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கும்பல் ஜெய்பூர் மற்றும் அஜ்மீரில் இது போன்ற பல திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய டீசல் திருட்டு (Diesel Theft) மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மாமன் மச்சான் இருவரும் இந்த திருட்டுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். அதாவது மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவது போல் நடித்து பூமிக்கு கீழே செல்லும் பெட்ரோலிய குழாயில் ஓட்டை இட்டு அதன் வழியாக டீசலை எடுத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து லாபம் பெற்றுள்ளனர். ஜெயப்பூரின் பக்ரு பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தஹ்மி கலன் கிராமத்தில் இந்த கும்பல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். அக்கம் பக்கத்தில் இவர்கள் மினரல் வாட்டர் தொழில் செய்வதாக கூறியுள்ளனர். அதற்கு ஏற்ப மினரல் வாட்டர் பாட்டில்களையும் வீட்டிற்குள் அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் இந்த கும்பல் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
டீசலை திருடியது எப்படி?
Jaipur में मकान से तेल पाइपलाइन तक सुरंग, Diesel चोरी का तरीका देख पुलिस भी हैरान pic.twitter.com/Fjbem61i0B
— TV9 Rajasthan (@TV9Rajasthan) June 14, 2025
இந்த கும்பல் வீட்டினுள்ளே இருந்து ஒரு சுரங்கப் பாதையை தோண்டி சுமார் 25 அடி தொலைவில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்-இன் நிலத்தடி குழாயில் கனெக்ஷன் செய்துள்ளன.ர் அந்த குழாயில் ஒரு வால்வை பொருத்தி அதன் மூலம் சட்ட விரோதமாக டீசலை எடுத்துள்ளனர். அக்கம் பக்கத்தில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தண்ணீர் வியாபாரம் செய்வதாக கூறி மறைமுகமாக இதனை விற்பனை செய்து வந்துள்ளனர்..
ஜூன் 6 2025 ஆம் தேதி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தரப்பிலிருந்து துணை காவல் ஆணையருக்கு ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில் அந்நிறுவனத்தின் பெட்ரோலிய குழாயில் அழுத்தம் குறைந்துள்ளதாகவும் இதனால் டீசல் திருட்டு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த விசாரணையின் போது அந்த குழு இந்த இடத்தை சோதனை செய்தனர்.
சோதனை செய்யும் பொழுது சுரங்கப்பாதை மற்றும் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் டீசல் விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது. மேலும் ராஜேஷ் உரங் என்பவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை போலீசார் மேற்கொண்டு வந்த பொழுது இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது டெல்லியை சேர்ந்த ஷ்ரவன் சிங் என்பது தெரிய வந்துள்ளது. அவர் தனது மைத்துனர் தர்மேந்திர வர்மா என்ற ரிங்கு உடன் இணைந்து இந்த நடவடிக்கையை நடத்தி வந்துள்ளார்.
திருடப்பட்ட டீசல் கருப்பு சந்தையில் மலிவான விலைக்கு விற்கப்பட்டு அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரில் இதே போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.