இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – மத்திய அமைச்சர் விளக்கம்
Govt Assures No LPG Shortage : திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றார்.

மாதிரி புகைப்படம்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், எல்பிஜி எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது என்றார். மேலும் பேசிய அவர், மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல்கள் உலக அளவில் எரிசக்தி சந்தையில் சில பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்றாலும், இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றார். சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்
திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை. தற்போதைய சர்வதேச சூழ்நிலை காரணமாக சிலருக்கு கவலையளிக்கலாம். ஆனால் அந்த நிலைமைகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இதையும் படிக்க : சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?
இதற்கிடையில், உலக அளவில் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு எரிசக்தி விநியோகத்தை தடையில்லாமல் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் அதிகளவில் எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை முதல் உணவகங்கள் செயல்படாது.. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூரில் நடவடிக்கை!
மேலும், எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சில முக்கிய ஹைட்ரோகார்பன் வளங்கள் எல்பிஜி உற்பத்திக்காக மாற்றி ஒதுக்கப்படவுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நடைமுறைகளின் கீழ், வீட்டு பயன்பாட்டிற்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் பைப் நெட்வொர்க் இயற்கை எரிவாயு மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ் ஆகியவற்றுக்கு 100 சதவீத விநியோகம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.