இனி ஸ்லீப்பர் கோச்சில் நிம்மதியா பயணிக்கலாம் – இந்திய ரயில்வேயின் புதிய ரூல்!
Railway New Rules : இந்திய ரயில்வே மே 15, 2025 முதல் புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இனி வெயிட்டிங் லிஸ்ட் அல்லது ஜெனரல் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது. இந்த புதிய நடைமுறைகள், முன் பதிவு செய்த டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு குறைந்த செலவில் பயணிக்க ஏதுவாக இருக்கிறது. மேலும் பேருந்து போன்ற பிற பயண முறைகளை ஒப்பிடுகையில் சிறந்த பயண அனுபவத்தை வழங்குகிறது. எனவே நீண்ட தூர பயணத்துக்கு ரயில் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இனி ஜெனரல் டிக்கெட் வைத்திருப்பவர்கள், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் ஏற அனுமதி இல்லை. இதுவரை, ஒரு ஜெனரல் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சில் ஏறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நடைமுறை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதி மே 15, 2025 அன்று முதல் அமலுக்கு வருகிறது.
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல்
இந்த புதிய விதி, ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தும். காரணம், அதிகமான பயணிகள் சாதாரண டிக்கெட்டுடன் அதிக கூட்டம் காரணமாக ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அது சிக்கலாக இருந்தது. இந்த நிலையில் இந்திய ரயில்வேயின் இந்த புதிய விதி அவர்களுக்கு ஆறுதலை அளித்திருக்கிறது.
பொதுப்பயணிகளுக்கு சவால்
இது, ஒரு வகையில் ஜெனரல் டிக்கெட் பயணிகளுக்கு சவாலான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. அவர்களால் ஸ்லீப்பர் அல்லது ஏசி வகுப்புகளில் ஏற முடியாது என்பதால், தங்களுக்கான தனி கோச்சில் மட்டுமே பயணிக்க வேண்டும். கூட்டம் அதிக நிறைந்த நேரங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.
முன்பதிவு இல்லாமல் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிப்பது சட்ட விரோதம்
இந்த புதிய விதியின் மூலம், இந்திய ரயில்வே அதிகாரிகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்பதிவில்லாமல் ஏசி அல்லது ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முயல்வது சட்ட விரோதமாகும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
மாற்று திட்டங்களை பரிசீலிக்க வேண்டியது அவசியம்
வெறும் ஜெனரல் டிக்கெட் வைத்திருப்பவர்கள், வெயிட்டட் லிஸ்டில் இருப்பவர்கள் (Waitlisted Ticket) இனி பயணத்திற்கு முன் உரிய வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் பேருந்துகள் போன்ற மாற்று பயண திட்டங்களையும் பரிசீலிக்கலாம். எனவே மே 15, 2025 அன்று முதல் ரயிலில் பயணிக்க விரும்புகிறீர்கள் என்றால், உரிய டிக்கெட்டை முன்பே உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ரயில்வே அதிகாரிகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் இனி முன்பதிவு இல்லாமல் பயணிப்பது சவாலாக இருக்கும்.