மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எப்போது தெரியுமா? தேதியை அறிவித்த மத்திய அரசு
India Population Census : நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், 16 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
டெல்லி, ஜூன் 17 : இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (India Population Census) இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் 2026 அக்டோபர் 1ஆம் தேதி மற்றும் 2027 மார்ச் 1ஆம் தேதிகளில் நடைபெறும் என மத்திய அரசு (Central Goverment) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசிதழும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடைசியாக 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
கடைசியாக எடுத்த, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் மக்கள் தொகை 1,210.19 மில்லியனதாக இருந்துள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் எனவும், ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட், லடாக் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் மத்திய அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
அரசாணை வெளியிட்ட மத்திய அரசு
Central Government declares that a census of the population of India shall be taken during the year 2027, gazette notification issued. pic.twitter.com/FUipgkLdYz
— ANI (@ANI) June 16, 2025
இது தொடர்பாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் பெயரில் வெளியிடப்பட்ட அரசிதழில், ”மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948 பிரிவு 3-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2027 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
லடாக், காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் 2026 அக்டோபர் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்” என கூறப்பட்டுளளது. இதற்கிடையில், 2025 ஜூன் 15 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். இதனை அடுத்து, இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் வெளியானது, 2027ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 81 மற்றும் 82 இன் படி, எல்லை நிர்ணயம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விதி. இதுவரை மூன்று முறை தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.