விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் மேடே அழைப்பை விடுத்த விமானி.. தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..
Air India Plane crash: அகமதாபாதில் இருந்து 242 பேரை ஏற்றி சென்ற விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அழைப்பு வந்த சில நொடிகளுக்கு பின் எந்த பதிலும் விமானி தரப்பில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், ஜூன் 12 2025: அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் (Air India Airlines)புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு மேடே (Mayday Call) அழைப்பை கொடுத்துள்ளனர். மேடே என்பது விமான போக்குவரத்துகளில் அவசரகால உதவிக்கான அழைப்பாகும். மேடே அழைப்பு விடுக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின் அந்த விமானத்திலிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போயிங் 787 8 ட்ரீம்லைனர் விமானம் 230 பயணிகள் மற்றும் 12 கேபின் குரு உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. விமானத்திலிருந்து துணை விமானி போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கு மேடே அழைப்பை விடுத்ததாகவும் அதன் பிறகு விமானத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) தெரிவித்துள்ளது. விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என 242 பேர் இறந்துள்ளனர். இந்த விமானம் கேப்டன் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
மேடே அழைப்பை விடுத்த விமானி:
வான் போக்குவரத்து கட்டுப்பாடின் கூற்றுப்படி அந்த விமானம் அகமதாபாத்திலிருந்து பிற்பகல் 1:39 மணிக்கு ஓடுதளம் 23 லிருந்து புறப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. மேலும் வான் போக்குவரத்து கட்டுப்பாடு வெளியிட்ட அறிக்கையில் மேடே அழைப்பு வந்தது என்றும் விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே போயிங் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. தரையில் விழுந்து விமான விபத்துக்குள்ளான காரணத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி விமானத்திலிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 242 பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் என்றும் 53 பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் ஏழு பேர் போர்ச்சுகீஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்:
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi) June 12, 2025
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விமான போக்குவரத்து அமைச்சர் ராமோகன் நாயுடுவை தொடர்புகொண்டு ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவலை தருமாறும் பிரதமர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் தற்போது தற்காலிகமாக விமான செயல்பாடுகள் ரத்து செய்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது