ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்த 3 முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Indian Railways Announces 3 Key Changes | இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து இந்திய ரயில்வே மூன்று புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த விதிகள் இன்று (மே 1, 2025) அமலுக்கு வந்துள்ள நிலையில், அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 1 : இந்தியாவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தொலைதூரம் பயணிப்பதற்கு ரயில் போக்குவரத்தையே (Train Transport) பெரிதும் நம்பியுள்ளனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோடை விடுமுறைக்காக பொதுமக்கள் வெளி மாநிலங்களுக்கு அதிகம் சுற்றுலா செல்வர். இதன் காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் (Ticket Reservation) மூன்று முக்கிய மாற்றங்களை செய்து இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த விதிகள் இன்று (மே 1, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு – 3 முக்கிய மாற்றங்கள்
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாக இந்திய ரயில்வே அறிவித்துள்ள மூன்று முக்கிய விதிகள்.
முன்பதிவு காலம்
இந்திய ரயில்வே பொறுத்தவரை ஒவ்வொரு ரயில்களுக்கு வெவ்வேறு முன்பதிவு காலம் இருக்கும். இந்த நிலையில், அனைத்து ரயில்களின் முன்பதிவு காலத்தையும் ஒரே மாதிரியாக மாற்றும் வகையில் இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, முன்பதிவு காலத்தை 60 நாட்கள் முதல் 90 நாட்களாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், இன்று (மே 1, 2025) முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 90 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய போதிய நேரம் கிடைக்கும் என்பதால் இந்த முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு ஐடியில் ஒரு நாளைக்கு இரண்டு தட்கல் டிக்கெட் மட்டுமே
ஒரு நாளைக்கு ஒரு பயனர் தனது ஐடியை பயன்படுத்தி இரண்டு தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய விதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ரயில்களில் 30 சதவீதம் மட்டுமே தட்கெட் டிக்கெட்டுக்காக ஒதுக்கப்படும் நிலையில், தட்கலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் நபர்களுக்கு இது சற்று சவாலாக இருக்க கூடும். எனவே, தட்ககில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பயண டிக்கெட்டை திரும்ப பெறுவது
ரயிலில் முன்பதிவு செய்த பயண டிக்கெட்டை திரும்ப பெறுவதற்கான விதியிலும் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 75 சதவீதம் பணம் திரும்ப வழங்கப்படும். இதுவே, 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்கு முன்னதாக ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் பணம் கிடைக்கும். ஆனால், நீங்கள் 24 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களது பணம் திரும்ப வழங்கப்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.