வெறும் ரூ.500 பணத்துக்காக நண்பனை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
Friend Kills Friend Over 500 Rupees | பெங்களூரில் தான் கொடுத்த ரூ.500 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த நண்பன், தனதி நண்பனை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக தற்போது விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, ஜூன் 24 : பெங்களூரில் (Bengaluru) கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பனை ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடனாக கொடுத்த ரூ.500-ஐ தொடர்ந்து கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது நண்பர் என்று பாராமல் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நபர்
கர்நாடக (Karnataka) மாநிலம் பலகாவி மாவட்டத்தில் உள்ள குடிச்சு தாலுகா பகுதியை சேர்ந்தவர் யாசீர். 24 வயதாகும் இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 25 வயதில் ரோகித் என்ற நண்பரும் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோகித், யாசீரிடம் ரூபாய் 500 கடனாக பெற்றுள்ளார். ஆனால் ரோகித், அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் யாசீர் ரோகித்திடம் பணத்தை திருப்பி தரும்படி கூறியுள்ளார். ஆனால் ரோகித் பணத்தை திருப்பி தராமல் இழுத்து அடித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வெறும் ரூ.500 பணத்துக்காக நண்பனை கொலை செய்த நபர்
இந்த நிலையில் சம்பவத்தன்று அங்கன்வாடி மைய வளாகத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த ரோகித்திடம், யாசீர் தான் கடனாக கொடுத்த ரூபாய் 500 பணத்தை கேட்டுள்ளார். இதன் காரணமாக மீண்டும் இருவருக்கும் அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரோகித், அங்கிருந்த கத்தியை எடுத்து யாசீரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த யாசீர் அதிக ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட யாசீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ரோகித்தை கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.