சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தமிழகம் உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Sabarimala Gold Theft Case ED Raid: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணபரிமாற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலையில் இருந்த தங்க கவசம் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்காக கொடுக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து திருதாங்கூர் தேவஸ்தானம் போர்டில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அதில் 4.54 கிலோ தங்கம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை கேரள நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, இந்தச் வழக்கில் தொடர்புடையதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரூ ராஜீவரு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டிருந்தது. இதில், தொழிலதிபருக்கு தொடர்பில்லை என்று நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய் குழு கிளீன் சர்டிபிகேட் சமர்ப்பித்திருந்தது.
தமிழகம் உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
இப்படியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, அம்பத்தூரில் உள்ள தங்க முலாம் பூசும் கடைகள், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் உன்னி கிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில் தேவசம் வாரிய தலைவர் பத்ம குமார் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: ‘இனி என் முதலாளி’ – பாஜகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிதினை வாழ்த்திய பிரதமர் மோடி
2019- ஆம் ஆண்டு மாயமான சபரிமலை தங்கம்
சட்ட விரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு 42 கிலோ கோவில் தங்கம் பராமரிப்பு பணிக்காக சென்னையில் உள்ள நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து 36 கிலோ மட்டுமே திரும்ப வழங்கப்பட்டிருந்தது. இதில், 4 கிலோ மாயமாக இருந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தங்க திருட்டு வழக்கில் 11 பேர் கைது
இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தற்போது வரை, உன்னி கிருஷ்ணன் போத்தி, சபரிமலை நிர்வாக அதிகாரி முராரி பாபு, செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், பெல்லாரி ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: வைரல் வீடியோவால் தற்கொலை செய்துக்கொண்ட நபர்.. வீடியோ வெளியிட்ட பெண்ணை வலைவீசி தேடும் போலீஸ்!