Chhattisgarh : 115 நாட்களில் கணவன்களால் கொலை செய்யப்பட்ட 30 பெண்கள்.. சத்தீஸ்கரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Chhattisgarh Wife Murders | இந்தூரை சேர்ந்த இளைஞர் ராஜா ரகுவன்ஷி தனது மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதனை தொடர்ந்து பெண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், சத்தீஸ்கரின் அதிர்ச்சியூட்டும் தரவுகள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Chhattisgarh : 115 நாட்களில் கணவன்களால் கொலை செய்யப்பட்ட 30 பெண்கள்.. சத்தீஸ்கரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

மாதிரி புகைப்படம்

Published: 

24 Jun 2025 08:07 AM

போபால், ஜூன் 24 : தேன்நிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞரை சோனம் என்ற பெண் கொலை செய்தததை தொடர்ந்து,  பெண்கள் மீது தொடர் குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் வகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ராஜா ரகுவன்ஷியின் கொலைக்கு பிறகு பெண்கள் கொலைகாரர்கள் என சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், சத்தீஸ்கரில் (Chhattisgarh) கடந்த 115 நாட்களில் மட்டும் 30 மனைவிகள் தங்களது கணவன்களால் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தரவுகள் வெளியாகியுள்ளது.

தேன்நிலவில் கணவனை கொலை செய்த மனைவில்

மத்திய பிரதேச மாநில இந்தூரை சேர்ந்த புதுமன தம்பதிகளான ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகாலயாவுக்கு தேன்நிலவுக்கு சென்ற நிலையில், சோனம் காணாமல் போன நிலையில், ராஜா ரகுவன்ஷியின் உடல் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான சோனம், கொலை சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், சோனத்திற்கு தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞருடன் காதல் இருந்ததும் அவருடன் சேர்ந்த வாழ்வதற்காக ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ததும் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் மீது தவறான பிம்பம் ஒன்று உருவாக்கப்பட்டு வந்தது.  குறிப்பாக பெண்கள் கொலைகாரர்கள் என்றும், அவர்கள் பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்பதை போலவும் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகி வந்தன. இந்த நிலையில், தான் சத்தீஸ்கர் குறித்த இந்த தரவுகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் 115 நாட்களில் 30 மனைவிகள் கொலை

ராஜா ரகுவன்ஷி கொலையை தொடர்ந்து பெண்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில், சத்தீஸ்கரின் வெறும் 115 நாட்களில் 30 பெண்கள் தங்களது கணவன்களால் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தரவுகள் வெளியாகியுள்ளது.

  • தமாத்தரி பகுதியில் திருமணம் ஆன இரண்டு மாதங்களே ஆன நிலையில், கணவன் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இந்த கொடூர செயலை அவர் செய்துள்ளார்.
  • பலோட் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்ணின் வழக்கில் திடீரெ திருப்பம் ஏற்பட்டது. நண்பர்களுடன் இணைந்து மனைவியை கொலை செய்த நபர், பின்னர் சாலை விபத்து போல நாடகமாடியுள்ளார்.

சத்தீஸ்கரின் நடைபெற்ற இந்த 30 கொலைகளில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் சந்தேகம் மற்றும் பொறாமையின் பேரில் நடைபெற்றுள்ளது. 6-க்கும் மேற்பட்ட கொலைகள் மோசமான மனநிலை கொண்ட கணவர்களாலும், பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் 2 பெண்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை தவிர கொடுமை, வரதட்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்கள் காரணமாகவும் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.