ரெடிமேட் மாவு தோசை சாப்பிட்ட 2 குழந்தைகள் பலி.. பெற்றோர்களுக்கு தீவிர சிகிச்சை!
3 Months Infant and 4 Years Old Baby Girl Died | குஜராத் மாநிலம், அகமதாபாத் பகுதியில் கடையில் வாங்கிய ரெடிமேட் தோசை மாவால் செய்யப்பட்ட தோசையை சாப்பிட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத், ஏப்ரல் 07 : குஜராத்தில் (Gujarat) ரெட்மேட் தோசை மாவால் (Ready Made Dosa Batter) செய்யப்பட்ட தோசையை சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அந்த குழந்தைகளின் பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய நகரங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ரெடிமேட் தோசை மாவு சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெடிமேட் தோசை மாவில் தோசை சாப்பிட்ட குடும்பத்து நேர்ந்த சோகம்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா பகுதியை சேர்ந்தவர்கள் விமல் பிரஜாபதி மற்றும் பாபனா பிரஜாபதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் தங்களது வீட்டின் அருகே இருந்த கடையில் இருந்து ரெடிமேட் தோசை மாவு வாங்கி வந்து அதில் தோசை செய்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட உடன் அந்த குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்




பரிதாபமாக உயிரிழந்த இரண்டு குழந்தைகள்
ரெடிமேட் மாவு தோசை சாப்பிட்டு உடல்நல குறைபாடால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது, அந்த தம்பதியின் ராஹா என்ற மூன்று மாத குழந்தையும், மிஷ்ரி என்ற நான்கு வயது பெண் குழந்தையும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அந்த தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்று மாத குழந்தை உயிரழந்தது எப்படி?
ரெடிமேட் தோசை மாவால் செய்யப்பட்ட தோசை சாப்பிட்டதால் குடும்பத்துக்கு உடல்நல சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த மூன்று மாத குழந்தை உயிரிழந்தது எப்படி என்பது குறித்து கேள்வி எழுந்தது. காரணம், 6 மாதங்களுக்கு பிறகு மட்டுமே குழந்தைகளுக்கு திட உணவுகளை வழங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. இந்த நிலையில், தோசை சாப்பிட்ட பிறகு குழந்தையின் தாய், பால் கொடுத்ததால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.