ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை
Jana Nayagan Movie Censor Case: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்திற்கு உரிய நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழு நீதிமன்றத்தை நாடிய நிலையில் தற்போது முக்கிய தீர்ப்பு வெளியாகி உள்ளது.

ஜன நாயகன்
தமிழ் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் உள்ள தளபதி விஜயின் ரசிகர்கள் அனைவரும் இந்த பொங்கல் பண்டிகையை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு காரணம் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜன நாயகன் படத்தை இன்று 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகயை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவிக்கப்படு இருந்ததுதான். நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்கி உள்ளதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரது நடிப்பில் 69-வது படமாக உருவாகி உள்ள ஜன நாயகன் படம் தான் இறுதிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த உடனே கடந்த மாதமே ஜன நாயகன் படக்குழு தணிக்கைச் சான்றிதழுக்காக படத்தை அனுப்பி வைத்து இருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஜன நாயகன் படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜன நாயகன் படக்குழு தணிக்கைச் சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா, விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மேல்முறையீட்டிற்காக தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர கோரிக்கை வைத்தார்.
ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ வழங்குமாறு அளித்த உத்தரவிற்கு தடை:
அதன்படி ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு ஜன நாயகனிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர். தணிக்கைச் சான்றிதழ் பெற பல நடைமுறைகள் இருக்கும் போது சான்றிதழுக்காக நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள் என்று கண்டனம் தெரிவித்தனர்.
Also Read… ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… தளபதி விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய கோலிவுட் சினிமா
மேலும் இந்த வழக்கில் முன்னதாக நீதிபதி பி.டி.ஆஷா அளித்த தீர்ப்பில் யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த உத்தரவிற்கு தற்போது தலைமை நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற 21-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படம் பொங்கல் அல்லது குடியரசு தினத்தில் வெளியாகாது என்பது உறுதியாகி உள்ளது.
Also Read… தள்ளிப்போன ஜன நாயகன்… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்கள்!