வாக்குப்பதிவு இடத்துக்கு விசிட் அடித்த யானை.. ஷாக்கான வாக்காளர்கள்… மேற்கு வங்கத்தில் சம்பவம்!
West Bengal Wild Elephant: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி அருகே திடீரென காட்டு யானை முகாமிட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடியி வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது போல மேற்கு வங்க மாநிலத்திலும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சுமார் 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் அந்த மாநிலத்தை சேர்த்த வாக்காளர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜார்கிராமில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே திடீரென யானை ஒன்று வந்தது. இதை பார்த்த வாக்காளர்கள் சற்று அதிர்ச்சிக்குள்ளாகினர். ஜார்கிராமில் ஜிதுசோல் தொடக்கப் பள்ளிக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் என்று அதிகாரிகள் முன்னதாகவே எச்சத்தில் எச்சரித்து இருந்த காரணத்தால், எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. வாக்குச்சாவடி அருகே யானை நடமாடியதை வாக்களிக்க வந்த வாக்காளர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
யானை வந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விற்பனை கூடத்திற்கு வெளியே யானை சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. மேலும், அந்த வீடியோவில் யானையை பார்த்த வாக்காளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததுடன், அந்த பகுதியில் உள்ள கட்டடங்களுக்குள் ஓடி சென்று ஒளிந்து கொண்டனர். ஆனால், அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யாமல், அங்கிருந்து விலகி சென்றது. இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் வழக்கமாக காணப்பட்டு வரும் என்று கூறப்படுகிறது.




மேலும் படிக்க: இந்தியா பயங்கரவாதத்திற்கு தலைவணங்காது – பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி பதிவு
தேர்தல் ஆணையம் தொடர் அறிவுறுத்தல்
அத்துடன், தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சற்று கவனத்துடன் வந்து செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தன. இதே போல, அந்த பகுதிகளில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக, இந்த பகுதி மட்டுமின்றி யானைகள் நடமாடும் பாதைகளுக்கு அருகில் உள்ள தெற்கு வங்காளத்தில் உள்ள சுமார் 25 வாக்குச்சாவடிகள் பாதிப்புக்கு உள்ளாக கூடியவை என அடையாளம் காணப்பட்டிருந்தன.
VIDEO | West Bengal Polls: An elephant entered the area near the polling station at Jitusol Primary School in Jhargram.
(Source: Third Party)#AssemblyPollsWithPTI #WestBengalPollsWithPTI
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/UN6axPscmO
— Press Trust of India (@PTI_News) April 23, 2026
யானைகள் நடமாடும் 60 சதவீத பகுதிகள்
இந்த இடங்களில் கிட்டத்தட்ட சுமார் 60 சதவீதம் ஜார்க்கிராமில் அமைந்துள்ள பகுதி ஆகும். தமிழகத்துடன் சேர்த்து மேற்குவங்க மாநிலம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மேற்குவங்க மாநிலம் மற்றும் தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!