விஜய் வருகைக்கு க்ரீன் சிக்னல்: ஸ்தம்பிக்கப்போகும் கடலூர்.. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!
Tvk Leader Vijay Campaign In Cuddalore: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கடலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. 2 மணி முதல் இரவு 10 வரை பரப்புரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வருகிற 21- ஆம் தேதி மாலை வரை மட்டுமே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பிரச்சாரத்துக்கு 11 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி, திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முதல்வருமான மு. க . ஸ்டாலின் காலை, மாலை என 2 நகரங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதே போல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தினந்தோறும் பல்வேறு தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
கடலூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். இதற்காக கடந்த மார்ச் மாதம் 30- ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பிரம்மாண்டமான முறையில் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை மேற்கொண்டிருந்தார். பின்னர், கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் படிக்க: வாக்காளர் கவனத்துக்கு.. வீடு தேடி வருகிறது பூத் சிலிப்.. சென்னையில் இன்று முதல் விநியோகம்!




கடலூரில் விஜய் பரப்புரைக்கு மீண்டும் அனுமதி
இந்த நிலையில், கடலூரில் நாளை சனிக்கிழமை ( ஏப்ரல் 11) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு காவல்துறை மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இதில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும், கடலூர், விருத்தாச்சலம் புறவழிச்சாலை, மஞ்சகுப்பம், திட்டக்குடி, வடலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை நடத்தி முடித்து இருந்தார்.
கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொள்ள திட்டம்
இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் வாகன பேரணி நடத்தினார். இது பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் தற்போது, கடலூரில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய், தொடர்ச்சியாக நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 12) கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கோரி கட்சியினர் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!