“ஆளத்தெரியாதவர்கள் ஆண்டால் கடன் தான் வரும்!”.. முதல்வர் ஸ்டாலினை விளாசிய இபிஎஸ்!!
Tamilnadu Assembly Election: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி
Tamilnadu Polls 2026: ஆளத்தெரியாதவர்கள் ஆண்டால், கடனில் தத்தளிக்கிறது தமிழ்நாடு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேரடி காந்தி சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘காஞ்சிபுரம் அதிமுகவின் கோட்டை, அண்ணா பிறந்த மண். இந்த பூமியில் இருப்பதே பாக்கியம். அவருடைய பெயரிலேயே எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கினார். அண்ணா உருவம் நம் கொடியில் உள்ளது. அண்ணா கண்ட கனவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நனவாக்கினார்கள். ஆனால், அண்ணா தொடங்கிய கட்சியை கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகம் என்று மாற்றிவிட்டார். அது, திமுக அல்ல, குடும்ப கட்சி.
இதையும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி.. பயணத்திட்டம் என்ன?
நாட்டை பற்றி பேசுங்கள்:
எப்போது பார்த்தாலும் என்னை பற்றி அப்பா, மகன், கனிமொழி பேசுகிறார்கள். நாட்டை பற்றி பேசுங்கள். அதிமுக ஆட்சியின் திட்டங்களைப் பட்டியல் இடுகிறேன், உங்கள் ஆட்சியின் திட்டங்களைச் சொல்லுங்கள். அப்படி இருந்தால் தானே சொல்வதற்கு..? மோடிக்கு, எடப்பாடி கொத்தடிமை, முரட்டு அடிமை என்கிறார் உதயநிதி. உங்கள் தாத்தா என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள். குஜராத்தை சிறப்பாக மேம்படுத்திய மோடி மிகவும் நல்லவர், கருணாநிதி பரபரப்பு பேட்டி என்ற செய்தி வந்துள்ளது. அவர் மோடிக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார்.
மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிப்பு:
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. அதனைத் தடுக்க முடியவில்லை ஏனெனில் அதற்கு திமுகவினர் துணை நிற்கிறார்கள். அதை காவல்துறையை தடுக்க முடியலை. அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
வங்கிக் கணக்கில் ரூ.10,000 வழங்குவோம்:
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் பிரிட்ஜ் வழங்கப்படும்.
ஆண்களுக்கும் பேருந்தில் இலவசம்:
சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ரூ.1,000 வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களைப்போல இனி ஆண்களும் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.
இதையும் படிக்க: காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..
எப்படி ரூ.2 ஆயிரம் கொடுப்பீர்கள்?. கடன் அதிகமாக இருக்கிறதே என்று கேட்கின்றனர். ஆளத்தெரியாதவர்கள் ஆண்டால் கடன் தான் வரும். அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கடன் அதிகரித்துவிட்டது. ஆளத்தெரிந்தவர் ஆண்டால் திட்டங்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.