மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. “தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழல் மாறும்”.. திருமாவளவன்
Tamilnadu Assembly Election: "தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்று நான் கூறியது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் வருகையை மட்டும் குறிக்கவில்லை. குறிப்பாக, விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதம் மற்றும் அது யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால அரசியல் நகர்வுகள் இருக்கும்" என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

திருமாவளவன்
Tamilnadu Polls 2026: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள 85.15% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இது வழக்கமான வாக்குப்பதிவுதான் என்றும், இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணங்களை விளக்கினார். இந்த வாக்குப்பதிவு உயர்வு ஒரு ‘மாயத் தோற்றம்’ என்றும், இதன் பின்னணியில் தேர்தல் ஆணையத்தின் சில முக்கியப் பணிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!
காரணத்தை விளக்கிய திருமா:
அதன்படி, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’ (SIR) மூலம் லட்சக்கணக்கான போலி மற்றும் தேவையற்ற வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இருந்திருந்தால், பழைய சதவீதமே நீடித்திருக்கும். தற்போது மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பதிவான வாக்குகளின் சதவீதம் கூடுதலாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் சராசரியாக 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைவார்கள். அந்த இயற்கை வளர்ச்சி இந்தத் தேர்தலிலும் நடந்துள்ளது என்றார்.
தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்பு:
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். களத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில் இதனைத் தாம் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரச்சாரத்தின் போது மக்களை நேரடியாகச் சந்தித்த போது அவர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருந்ததை உணர முடிந்ததாக கூறிய அவர், கொள்கை ரீதியான பலம் மற்றும் கடந்த ஐந்தாண்டு காலத் திட்டங்கள் தங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்று அவர் கூறினார்.
தமிழக அரசியல் சூழலில் மாற்றம் வருமா?
தமிழக அரசியலில் புதிதாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்துத் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். “தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்று நான் கூறியது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் வருகையை மட்டும் குறிக்கவில்லை. குறிப்பாக, விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதம் மற்றும் அது யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால அரசியல் நகர்வுகள் இருக்கும்” என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?
வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை ஆளுங்கட்சிக்குச் சாதகமான அலையாகப் பார்க்காமல், அதை ஒரு தொழில்நுட்ப ரீதியான மாற்றமாகவே திருமாவளவன் முன்வைக்கிறார். அதேசமயம், திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார். வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதுதான் இந்த மாற்றங்கள் யாருக்குச் சாதகமாக முடிந்துள்ளன என்பது தெரியவரும்.