“நாங்க என்ன தர்மத்துக்காகவா கட்சி நடத்துறோம்?”.. பாஜக மீது அதிருப்தி தெரிவித்த அதிமுக..
Puducherry Assembly Election: கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, கடந்த முறை ஐந்து தொகுதிகளில் களம் கண்டது. ஆனால், இந்த முறை வெறும் இரண்டு தொகுதிகளில் (உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை) மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன்
Puducherry Polls 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எனினும், அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விதம் குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ளதால், அங்கு உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க: புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!!
குறைந்த தொகுதிகள் – அதிமுகவின் விளக்கம்:
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, கடந்த முறை ஐந்து தொகுதிகளில் களம் கண்டது. ஆனால், இந்த முறை வெறும் இரண்டு தொகுதிகளில் (உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை) மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், “பல்வேறு காலச் சூழ்நிலைகளால் அதிமுக குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி, கூட்டணியின் தர்மத்தைக் காக்க இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ஆட்சியில் நிச்சயம் பங்கு கேட்போம்:
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தங்களை முறையாக அழைக்கவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும், வெற்றியின் மீது அதிமுக உறுதியாக உள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் தொகுதிகளை அறிவித்தது புதுச்சேரி அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்பழகன், “நாங்கள் என்ன தர்மத்துக்காகவா அரசியல் நடத்துகிறோம்? வெற்றி பெற்றால் நிச்சயம் ஆட்சியில் பங்கு கேட்போம். ஒருவர் எம்.எல்.ஏ ஆனார் என்றால் அடுத்த கட்டம் அமைச்சரவையில் இடம் பெறுவதுதான்” என வெளிப்படையாகப் பேசினார்.
இதையும் படிக்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!
அரசியல் முக்கியத்துவம்:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுகவின் இந்த இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு, அக்கட்சியின் பலத்தை சோதிக்கும் ஒரு களமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை இப்போதே முன்வைத்திருப்பது வரும் நாட்களில் கூட்டணியில் மேலும் பல விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.