K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!
Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர் வெற்றியில் திளைத்து வரும் முன்னாள் அமைச்சரும், எல்எல்ஏவுமான க.பொன்முடி மீண்டும் சட்டமன்ற தொகுதியில் களமிறக்கப்படுவாரா. திமுக தலைமை என்ன நிலைபாட்டில் உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் மீண்டும் களமிறக்கப்படுவாரா க.பொன்முடி
திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவாகவும் இருந்து வருபவர் க. பொன்முடி. இவர், 1950- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19- ஆம் தேதி தெய்வசிகாமணி என்பவருக்கு மகனாக பிறந்தார். இளமை காலத்திலேயே திராவிட கழகம் மற்றும் பெரியார் கொள்கை மீது தீவிர பற்று கொண்டவர் ஆவார். ஆரம்ப காலத்தில் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த பொன்முடி, திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்தார். அப்போதே, கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். தற்போது, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் திமுக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
தொடர் வெற்றியில் திளைத்த க. பொன்முடி
கடந்த 1989- ஆம் ஆண்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக களமிறங்கிய க. பொன்முடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இதை தொடர்ந்து 1991- ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 1996- ஆம் ஆண்டு இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தனது வெற்றியை நிரூபித்தார். 2001- ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்ட பொன்முடி மீண்டும் வெற்றி பெற்றார். 2006- இல் மீண்டும் வெற்றியை உறுதி செய்தார். ஆனால், 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அவருக்கு வசப்படவில்லை.
திருக்கோவிலூர் தொகுதியில் இரு முறை வெற்றி
இதைத்தொடர்ந்து, 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றி போட்டியிட்ட க. பொன்முடி வெற்றியை தன தாக்கி கொண்டார். கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் களமிறங்கிய க. பொன்முடி மீண்டும் வெற்றியை பதிவு செய்தார். அப்போது, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த பொன்முடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதன் அடிப்படையில், அமைச்சரவையில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.
பொன்முடிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா
மேலும், பொன்முடி மீது திமுக தலைமைக்கு சற்று அதிருப்தி இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் க. பொன்முடிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்குமா என்பதில் சற்று சந்தேகம் உள்ளது. இதில், மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது எனவும் பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், மீண்டும் அதே தொகுதியில் பொன்முடி களமிறக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு வசமாக சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கூட்டணி கனவுடன் வந்த சசிகலா.. ஒரே வார்த்தையில் “நோ” சொன்ன ராமதாஸ்.. காரணம் என்ன!