252 முறை தோல்வி.. 253- ஆவது முறையாக வேட்புமனு தாக்கல்.. யார் இந்த தேர்தல் மன்னன்!
Election King Padmarajan: நாட்டில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் 252 முறை வேட்புமனு தாக்கல் செய்து தொடர் தோல்வி அடைந்து வரும் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் தற்போது, 253- ஆவது முறையாக மேட்டூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் மன்னன்
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளன. அதன்படி, இந்த வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதே போல, சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் 583 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன் 253- ஆவது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மராஜன். இவர், துணை ஜனாதிபதி தேர்தல், டெல்லி மேல் சபை எம்பி மற்றும் எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் பிரதமர் தேர்வு ஆகியோர் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தேர்தல் மன்னன்
ஆனால், எந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றது இல்லை. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறார். நாட்டில் எந்தவிதமான தேர்தல் நடந்தாலும் வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்து வரும் பத்மராஜன், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: வெற்றி மற்றும் சாதனை கிடையாது. தோல்வியிலும் சாதனை படைக்கலாம். இதற்காகவே அனைத்து விதமான தேர்தல்களிலும் மனு தாக்கல் செய்து வருகிறேன்.
மேலும் படிக்க: அடேங்கப்பா! தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்
253- ஆவது முறையாக வேட்புமனு தாக்கல்
தற்போது, நான் 253- ஆவது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். அந்த தேர்தலில், எதிர்பாராத வகையில், 6,273 வாக்குகள் கிடைத்தது. இதுவே, எனது அதிகபட்ச வாக்குகள் ஆகும். இதே போல, அதே ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பி. என். பட்டி பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் எனக்கு யாரும் வாக்கு செலுத்தவில்லை.
மேட்டூர் தொகுதி மக்கள் மனது வைக்க வேண்டும்
தேர்தலில் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டதால் சாதாரண மக்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெபாசிட் தொகையை பாதியாக குறைக்க வேண்டும். வாகன பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் டெபாசிட் தொகை செலுத்த பணம் இல்லை. எனது நண்பர் ஒருவர் அந்த பணத்தை செலுத்தி உள்ளார். மேட்டூர் தொகுதி மக்கள் மனது வைத்தால் நானும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!!