திமுகவிற்கு 2.0 இல்லை.. பூஜ்ஜியம் தான் கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
Edappadi Palaniswami On DMK: “மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக 2.0 ஆட்சி அமையும்” என ஸ்டாலின் கூறி வருவது, தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றும் முயற்சியே என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 7, 2026: எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், ஒருசில மக்களின் நாக்கில் தேன் தடவும் அரசியலைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக எந்த முக்கியமான வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த உண்மையை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கவர்ச்சிகரமான பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் “விடியா திமுக” அரசின் செயல்பாடுகளை விளக்குவதற்காக, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ‘திமுக-வின் உருட்டுக்கடை அல்வா’ என்ற பெயரில் அரசை விமர்சித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தவெக விருப்ப மனு பெற போட்டா போட்டி.. முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் வாங்கினர்..
மக்களை ஏமாற்றும் அரசு:
மத்திய அரசிடம் உரிய முறையில் வாதாடவும், பேச்சுவார்த்தை நடத்தவும் தவறிய நிர்வாகத் திறனற்ற அரசு, ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை என பொய்யான காரணங்களை கூறி மக்களை ஏமாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான விரிவான திட்ட அறிக்கைகளை கூட மத்திய அரசிடம் சமர்ப்பிக்காத நிலையில், தங்களின் தோல்வியை மறைக்க திமுக அரசு பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுகவுக்கு தோல்வி நிச்சயம்:
ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்துள்ள பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/8B6HnMkZDt
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) February 6, 2026
“மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக 2.0 ஆட்சி அமையும்” என ஸ்டாலின் கூறி வருவது, தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றும் முயற்சியே என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நெஞ்சுரத்தோடு, தலை நிமிர்ந்து மக்களை சந்திக்கும் என்றும், தங்களின் ஆட்சியின் மாட்சிமைகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கும் வல்லமை எங்களுக்குண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக முன்னேற்றத்திற்காக என்ன செய்தீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் கூறி ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைப்பது 2.0 அல்ல; வெறும் ‘0’ தான் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார் என தெரிவித்தார்.