சட்டமன்ற தேர்தல் புகார்… காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறப்பு!
Election Control Room: தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் காவல் துறை சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் தொடர்பான புகார்கள், விதிமீறல்கள் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம்.

கோப்புப்படம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்திருந்த நிலையில், சுமார் 3 நாள்கள் தேர்தல் நடத்தும் மாவட்ட அதிகாரி, காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் விரிவான ஆலோசனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி, கல்லூரிகளின் இறுதி ஆண்டு தேர்வுகள் மற்றும் கோடை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
சென்னையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
இதே போல, அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், தேர்தல் வாக்குறுதிகள் தயார் செய்தல் என்பன உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை காவல்துறை சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எந்த வித முறைகேடுகளும், வன்முறைகளும் இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க: “அதிமுகவில் பழிவாங்கப்பட்டேன்”.. திமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்..
24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை
அதன்படி, சென்னை வேப்பெரியில் உள்ள பெருநகர காவல் துறை அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையானது 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான முறைகேடு, தேர்தல் நேரத்தில் வன்முறை சம்பவங்கள், வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் அளித்தல் என்பன உள்ளிட்ட புகார்களை அளிக்கலாம். இந்த அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக கூடுதல் துணை ஆணையர் குமரகுருபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆணையர் செங்குட்டுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை தவிர்த்து கட்டுப்பாட்டு அறையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வருமானவரித்துறை கட்டுபாட்டு அறை திறப்பு
இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பார்கள். தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் தேர்தல் பறக்கும் படை, ரோந்து போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவிப்பார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் செலவுகள் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டுமென்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..