புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை… மல்லிகார்ஜூன கார்கே!
Congress Leader Mallikarjun Kharge: புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் மத்திய பாரதீய ஜனதா அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று புதுச்சேரியில் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்தியஅரசின் ஒத்துழைப்பில்லை
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 4) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலின் நிலங்களையும் பாஜக கூட்டணி அரசு சுரண்டி வருகிறது. புதுச்சேரியில் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலான ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் சுத்தமான, தூய்மையான தண்ணீர் கேட்டு வருகின்றனர். ஆனால், புதுச்சேரி மாநில பாஜக கூட்டணி அரசு மதுவை வழங்கி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் படித்து விட்டு அதிகளவிலான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏழை-எளிய மக்களுக்கு திட்டங்கள்
நாட்டின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது வங்கியில் அனைத்தையும் தேசிய மயமாக்கியதுடன், விவசாயிகளுக்கு தாராளமாக வங்கி கடன் வழங்கப்பட்டது. தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான நிதிகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களின் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு வங்கிகள் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் எந்த பொதுத்துறை நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. மக்களுக்காக எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு சொத்துரிமை ஆண்களைப் போல பெண்களுக்கும் சமமான வருமானம்.
மேலும் படிக்க: ‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!
பெண்களுக்கு பல்வேறு வகைகளில் முன்னுரிமை
மகப்பேறு காலத்தில் அவர்களுக்கான உதவிகள், விதவைகளுக்கான நிதி உதவி, மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்குவதற்கான திட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு என். ஆர். காங்கிரஸ்- பாஜக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சியானது இளைஞர்கள், முதியோர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கும் அரசாகவும், அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் அரசாக இருந்தது.
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஒத்துழைப்பு இல்லை
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய பாஜக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி இந்த திட்டத்திற்கும், மாநில அரசின் நிர்வாகங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டார். எனவே, புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அமைவதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். உங்களது தலையெழுத்தை மாற்றுவதற்கான வழி உங்களிடமே உள்ளது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
மேலும் படிக்க: “விஜய் என் தம்பி.. அவருக்கு என் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் உண்டு”.. குஷ்பு நெகிழ்ச்சி!!