3வது முறையாக ஸ்விகி கட்டணம் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Swiggy Ups Platform Fee: பெரு நகரங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்விகி, ஜொமேட்டோ செயலிகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. குறிப்பாக ஸ்விகி நிறுவனம் 3 வாரங்களில் 3வது முறையாக ஸ்விகி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ஸ்விகி நிறுவனம் ஒரு ஆர்டருக்கு ரூ.15 கட்டணம் கூடுதலாக வசூலிக்கிறது.

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஸ்விகி (Swiggy), ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். உணவகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை, அலைச்சல் இருக்காது போன்ற காரணங்களால் உணவு டெலிவரி ஆப்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உணவு டெலிவரி ஆப்களுக்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பிரபல உணவு டெலிவரி ஆப்பான ஸ்விகி கட்டணத்தை 3வது முறையாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.15 அதிகம் வசூலிக்கிறது. இது கடந்த 3 வாரங்களில் 3 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த ஆகஸ்ட் 15, 2025 சுதந்திர தினத்தன்று ஸ்விகி ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.14 கட்டணம் வசூலித்தது. அதன் பின்னர் அதனை மீண்டும் ரூ.12 ஆக குறைத்தது. சில நகரங்களில் மீண்டும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.14 கட்டணம் வசூலித்தது. அதன் பின்னர் அதனை ரூ.12 ஆக குறைத்தது. தற்போது நாடு முழுவதும் பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்புக்காக காத்திருக்காதீர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. காரணம் என்ன?




பிளாட்ஃபார்ம் கட்டணம் என்ன?
பிளாட்ஃபார்ம் கட்டணம் ஜிஎஸ்டி மற்றும் இதர கட்டணங்கள் என்ற பிரிவில் சேர்க்கப்படுகிறது இதில் பேக்கேஜிங் கட்டணம், ஜிஎஸ்டி, மழைகால டெலிவரி சார்ஜ் போன்றவை சேர்க்கப்படுகின்றன. ஸ்விகி தற்போது ஒரு நாளில் சுமார் 20 லட்சம் ஆர்டர்கள் வரை டெலிவரி செய்கிறது. தற்போது ரூ.15 ஆக கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தினசரி வருவாய் ரூ.3 கோடி வரை உயரவுள்ளது. மேலும் காலாண்டில் ஸ்விகி நிறுவனத்துக்கு ரூ.54 கோடியும் வருடத்திற்கு ரூ.216 கோடியும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என பிசினஸ் டுடே தளத்தில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் – ஜூன், 2025 காலாண்டில் ஸ்விகி நிறுவனத்துக்கு ரூ.1,197 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அதன் இன்ஸ்டாமார்ட் பிரிவில் அதிக முதலீடு செய்தது தான்.
இதையும் படிக்க : போன் பே, கூகுள் பே-க்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.. யுபிஐ சேவையை தொடங்க திட்டம்!
ஜொமேட்டோவின் கட்டணமும் உயர்வு
ஜொமேட்டோ நிறுவனம் சமீபத்தில் தனது ஃபிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.12க்கு உயர்த்தியது. தற்போது ஜொமேட்டோ தினசரி 23 முதல் 25 ஆர்டர்கள் வரை டெலிவரி செய்கிறது. இதன் மூலம் தினசரி ரூ.3 கோடி வருமானம் கிடைக்கிறது. அதே போல காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு ரூ.45 கோடி வரை கூடுதல் வருவாய் பெறுகிறது என்று கூறப்படுகிறது.
ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ நிறுவனங்கள் ஃபிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்தினாலும் அவை அனைத்து நகரங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. நகரங்களுக்கு ஏற்ப அது மாறுபடும் என கூறப்படுகிறது.