வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உங்களை பாதுகாக்கும் 5 சட்ட உரிமைகள்!
Tenant Rights Advisory : வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களுக்காக வகுப்பட்ட சட்ட உரிமைகளை தெரிந்துகொள்வது அவசியம். இதன் மூலம் வீட்டின் உரிமையாளர் திடீரென வீட்டை விட்டு வெளியேற சொல்வது, அதிக அட்வான்ஸ் பெறுவது போன்ற சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த கட்டுரையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்ட உரிமைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மாதிரி புகைப்படம்
சொந்த ஊரில் இருந்து வேலை, கல்வி (Education) நிமித்தமாக, பலரும் நகரங்களை நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு வாடகை வீடு (Rented House) என்பது மிகவும் கைகொடுக்கிறது. சென்னை (Chennai), பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் நம் வசதிக்கு ஏற்ப சிறிய ரூம்களில் இருந்து பெரிய அபார்ட்மென்ட் வரை வாடகைக்கு வீடு கிடைக்கிறது. வாடகையும் அதற்கு ஏற்ப செலுத்த வேண்டியிருக்கும். வீட்டின் உரிமையாளர், தன் வீட்டில் வசிப்பவர்களிடம் சில கண்டிஷன்களை போடுவார். சில நேரம் வாடகை வீட்டுக்கு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட வேண்டியிருக்கும். இது வீட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும். அந்த வகையில் வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், அவர்கள் எந்தெந்த சட்ட உரிமைகளை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. இந்தியாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட உரிமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. உங்கள் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைய முடியாது
உங்கள் அனுமதியின்றி, வீட்டு உரிமையாளர் வீட்டிற்குள் நுழைவது சட்டவிரோதமானது. இது உங்கள் தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது. உங்களிடம் முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டில் உள்ளே வர முடியாது.
2. வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம்
ஒரு வீட்டில் 11 மாதங்களுக்கு மேல் வாடகை வீட்டில் இருந்தால், அதற்கான ஒப்பந்தம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சாதாரண காகிதத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லாது. பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் எழுதப்படும் ஒப்பந்தம் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். இது வீட்டின் உரிமையாளர் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அது உங்களுக்கு பாதுகாப்பாக அமையும்.
3. திடீரென வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது
சண்டை மற்றும் வாடகை தாமதம் போன்ற காரணங்களை சொல்லி உரிமையாளர் உங்களை உடனே வெளியேற்ற முடியாது. இதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். குறிப்பாக முன் கூட்டியே வீட்டின் உரிமையாளர் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறைந்தது 2 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
4. அட்வான்ஸ் தொகைக்கு சட்ட வரம்பு உள்ளது
அட்வான்ஸ் தொகையை உரிமையாளர் கேட்கலாம். ஆனால் இது சட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். குறிப்பாக டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களில் 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக 3 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுக்க வேண்டும். சில இடங்களில் 6 முதல் 10 மாத அட்வான்ஸ் கேட்பது சட்டவிரோதம்.
5. வாடகை ரசீது பெறுவது உங்கள் உரிமை
நீங்கள் ரொக்கமாக வாடகை செலுத்தினாலும், ரசீது கேட்டால் உரிமையாளர் கட்டாயம் வழங்க வேண்டும். இது வாடகை செலுத்தியதற்கான சட்டப்பூர்வமான ஆதாரம். எனவே செலுத்திய வாடகைக்கு ரசீது பெறுவது கட்டாயம்.
வாடகை வீடுகளில் வசிப்பது தற்காலிகமான ஒன்று என்றாலும், உங்களுக்கான உரிமைகள் சட்ட ரீதியாக வகுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதனால், பாதிப்புகள் ஏற்படும்போது உங்களை தற்காத்துக்கொள்ளலாம்.